உலகம்

அமெரிக்கா: தவறுதலாக தோட்டா பாய்ந்து 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி பலி.. குற்றவாளிக்கு 100 ஆண்டு சிறை !

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பள்ளிகள், பொதுஇடங்களில் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொள்ளும் நிகழ்வு அன்றாட நிகழ்வாக அங்கு மாறியுள்ளது. இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு 5 வயது இந்திய வம்சாவளி சிறுமியை சுற்றுக்கொன்ற வழக்கில் ஒருவருக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மன்கவுஸ் டிரைவ் என்ற இடத்தில அந்த இந்திய வம்சாவளி சிறுமி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமியின் தலையில் துப்பாக்கி தோட்டா ஒன்று துளைத்துச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி 3 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் 35 வயதுடைய ஜோசப் லீ ஸ்மித் என்பவரை போலிஸார் கைது செய்தனர்.

அவெரிடம் நடத்திய விசாரணையில் வேறொருவரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது கோவத்தில் துப்பாக்கியால் சுட்டதும் அந்த தோட்டா அந்த சிறுமியின் தலையை துளைத்ததும் தெரிவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அங்கு நடைபெற்ற விசாரணையில், கொலை செய்த குற்றத்திற்காக 60 ஆண்டுகள், நீதியை முடக்கியதற்காக 20 ஆண்டுகள் மற்றும் இதர குற்றச்சாட்டுகளுக்கு 20 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளார். இந்த காலத்தில் பிணை, முன்பே விடுவிக்கும் சலுகை உள்ளிட்ட வேறு எந்த பலன்களையும் அவர் பெற முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Also Read: சாதி பாகுபாட்டுக்கு எதிராக சட்டம்.. கலிஃபோர்னியா சபையில் அறிமுகம்.. சாதிக்கு எதிராக திரும்பும் அமெரிக்கா!