உலகம்
10,500 கொலைகளுக்கு உடந்தை.. 97 வயது மூதாட்டிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை.. தீர்ப்பின் பின்னணி என்ன ?
ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி புரிந்த ஹிட்லரின் இனவெறியும், கொடூர ஆட்சியும் அனைவருக்கும் தெரிந்ததே. 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் நீடித்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்தன.இனவெறியும் ரத்த வேட்கையும் நிறைந்த ஹிட்லர், கொலைக்களங்களை அமைத்து விஷவாயுக்கள் உள்பட பல துன்புறுத்தல்களை அரங்கேற்றி யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தார்.
அதிலும் வதை முகாம்களில் யூதர்களை தவிர கம்யூனிஸ்டுகள், எதிர்ப்பாளர்கள் போன்றோரை கொல்ல இனவெறி நாஜிக்கள் பயன்படுத்திய முறைகள், கேட்கும் எல்லோருக்கும் குலைநடுங்கச் செய்பவை. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை விஷவாயுக் கிடங்கில் அடைத்துக் கொலை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்பியது, சிம்பொனி இசையை ஆயிரம் டெசிபலில் அலறவிட்டுப் பலரைக் கொன்றது என நாஜிக்களின் கொடூர உணர்வுகள் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.
இந்த நிலையில், அத்தகைய வதை முகாம்களில் பணிபுரிந்து 10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு பல ஆண்டுகளுக்கு பின் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இம்கார்ட் ஃபியூஷ்னர் என்பவர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் பணியாற்றிய வதைமுகாமில் யூதர்கள், யூதர் அல்லாத போலந்து குடிமக்கள், போரில் பிடிபட்ட சோவியத் வீரர்கள் உள்ளிட்ட 65 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் 10,500 கொலைகளுக்கு இவர் உடந்தையாக இருந்ததாக இவர்மேல் குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இவர் விடுவிக்கப்பட்டாலும், நேரடியாக இல்லாவிட்டாலும் நாஜி வதை முகாமில் பணிபுரிந்ததே அங்கு நடந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்தது தான் என சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட நிலையில், மீண்டும் இம்கார்ட் ஃபியூஷ்னர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இம்கார்ட் ஃபியூஷ்னர் மீது குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அவரின் வயது காரணமாக அவர் சிறையில் அடைக்கப்படமாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஹிட்லர் காலத்தில் நடந்த குற்றங்களுக்காக கடைசியாக தண்டனை பெற்றவர் என்ற பெயருக்கு இம்கார்ட் ஃபியூஷ்னர் தகுதியாகியுள்ளார்.
Also Read
-
17வது சட்டப்பேரவை தேர்தல்.. தொடர்ந்து 4வது முறை கொளத்தூரில் போட்டி - வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர்!
-
10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமன்னார்கோயிலில் களமிறங்கும் திருமா.. வி.சி.க. வேட்பாளர்கள் யார், யார்?
-
தேர்தல் 2026 : களமிறங்கும் 234 பேர்... வெல்லும் வேட்பாளர்கள் மூலமாக இலக்கை வெல்வோம்! - முரசொலி!
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!