உலகம்

சிறந்த நடிகர் to சிறந்த மனிதர்.. அமெரிக்கா பத்திரிகை இதழ் பட்டத்தை தட்டி செல்லும் உக்ரைன் அதிபர் !

ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள், சிறந்த நபர், சிறந்த ஆட்சியாளர், மனிதர், என பட்டியல்கள் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டில் சிறந்த விஷயங்கள் எது என்று அந்தந்த நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது.

அப்படி இந்தாண்டின் சிறந்த மனிதராக பிரபல ஆங்கில பத்திரிகை ஒரு நபரை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் இயங்கும் இதழ் தான் 'Time'. இந்த இதழ் ஆண்டுதோறும் உலக அளவில் அரசியல், இலக்கியம் என சிறந்து விளங்கும் பிரபலமான நபர்களில் சிறந்த நபர் யார் என்று தேர்ந்தெடுத்து தனது இதழில் வெளியிடும். அப்படி இந்தாண்டு சிறந்த நபராக உக்ரைன் அதிபரை டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.

இதுகுறித்து டைம் இதழ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2022-ம் ஆண்டின் சிறந்த நபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. அவர் உக்ரைனின் உத்வேகம" என்று குறிப்பிட்டு கெளரவித்துள்ளது. அப்படி இந்தாண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கு என்ன செய்து விட்டார் ஜெலன்ஸ்கி என்று யோசித்தால், தனது நாட்டிற்காக தானும் போரில் கலந்து கொண்டுள்ளார்; தனது நாட்டின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளார்.

விளாடிமிர் ஜெலன்ஸ்கி, உக்ரைனின் அதிபராக இருக்கும் முன்னர் அவர் ஒரு சிறந்த நடிகராக இருந்தவர். திரைப்படத்துறையில் ஆர்வம் மிகுந்த இவர், திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படங்களை தயாரித்து வந்தார். இதைத்தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கிய அவர், 'Servant of the People' என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க தொடங்கினார்.

2015 முதல் 2019 வரை ஒளிபரப்பான இந்த தொடரை இவரே தயாரித்துள்ளார். மேலும் இதில் இவர் உக்ரைனின் அரசு தலைவராகவும் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற உக்ரைன் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று அதிபரானார்.

இவர் அதிபரான பிறகு தான் உண்மையான கதையே தொடங்கியது என்று கூறலாம். இந்த ஆண்டு (2022) உக்ரைன் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைய விரும்பியது. ஆனால் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்பதால் உக்ரைனை சேரக்கூடாது என்று வற்புறுத்தியது.

ஆனால் ரஷ்யாவின் அறிவுறுத்தலை ஏற்க உக்ரைன் மறுத்தது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது போர் அறிவித்தது. கடல், வான், நிலம் என அனைத்து வழிகளிலும் போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரில் உக்ரைன் - ரஷ்யா நாடுகளில் உள்ள வீரர்கள் தங்கள் உயிரை துறக்க நேரிட்டது.

தனது நாட்டிற்காக அனைத்து ஆண்களும் போரில் இறங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தானும் ஒரு போர் வீரன் என்று கூறி போர்க்களத்தில் நின்றும் போர் புரிந்தார். எப்போதெல்லாம் தனது இராணுவம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் அவர்களுக்கு உத்வேகம் அளித்து வருவார்.

இப்படி தொடர்ந்து தனது நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்தும் போரே வந்தாலும் பின் வாங்க கூடாது என்றும் முன்னின்று போர் புரிந்து வரும் ஜெலன்ஸ்கி உக்ரைன் இளைஞர்களுக்கு, மக்களுக்கு ஒரு ஹீரோவாக தான் இருக்கிறார். இதனாலே டைம் பத்திரிகை இந்தாண்டு சிறந்த மனிதராக இவரை தேர்ந்தெடுத்துள்ளது.

Also Read: நாட்டையே உலுக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து: இன்று முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி!