உலகம்

பிரிட்டனின் படிக்க இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடு.. பிரதமரானதும் ஆட்டத்தை தொடங்கிய ரிஷி சுனக் !

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் பதவியேற்ற சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாக அமைந்துள்ள நிலையில், நெருக்கடியை சமாளிக்க பல அதிரடி நடவடிக்கைகளை ரிஷி சுனக் எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனின் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வே இதற்கு காரணம் என ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக உயர்நிலை பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாணவர்களை சார்ந்தவர்களுக்கான விசாக்களை வழங்குவது கட்டுப்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிக அளவு கல்வி பயின்றுவரும் நிலையில், ரிஷி சுனக் அரசின் இந்த செயல்பாடு அங்கு கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அர்ஜென்டினா அணியை தனியொருவனாக தலையில் சுமக்கும் மெஸ்ஸி.. #ARGvsMEX போட்டியில் நடந்தது என்ன ?