உலகம்

நடு கடலில் கவிழ்ந்த கப்பல்.. வியட்நாமில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதிகள்.. பின்னணி என்ன ?

கடந்த 2019ம் ஆண்டு வந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து. அதனைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்ட நிலையில், அங்கு பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் இலங்கை தமிழர்கள் 300க்கும் அதிகமானோர் புகலிடம் தேடி கப்பல் ஒன்றில் கனடா நோக்கி சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் இடையே சென்றபோது திடீரென நடுக்கடலில் மூழ்கத்தொடங்கியுள்ளது.

கப்பல் மூழ்கத்தொடங்கிய தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் கடற்படையினர் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த கப்பலையும், கப்பலில் பயணித்த 306 பயணிகளையும் பத்திரமாக மீட்டு அதில் இருந்த அனைவரையும் அருகில் இருந்த வியட்நாமுக்கு அழைத்துச்சென்றனர்.

இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்ல வியட்நாம் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என அகதிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், தங்களை இலங்கைக்கு மீள நாடு கடத்த அதிகாரிகள் முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், இலங்கை அகதிகளில் இருவர் கடந்த நவம்பர் 18ஆம் தேதி இரவில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: காட்டில் மயங்கி விழுந்து உயிருக்குப் போராடிய நபர்.. குரைத்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்!