உலகம்

சக பயணி மீது சிறுநீர் கழித்த முதியவருக்கு சிறை: பறந்து கொண்டிருந்த விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

பறந்து கொண்டிருந்த விமானத்தில் போதையில் இருந்த ஒருவர், தனது சக பயணி மீது சிறுநீர் கழித்துள்ள சம்பவத்தால் அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி என்ற பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடந்த 2-ம் தேதி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்வேறு நாட்டு பயணிகளும் பயணம் மேற்கொள்ளும் இந்த விமானத்தில் நியூசிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் ஹு (வயது 72) என்ற நபரும் பயணம் செய்தார்.

விமானத்தில் பயணம் மேற்கொண்ட இவர், விமானத்தில் ஏறியது முதல் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் அவர்களை வம்புக்கும் இழுத்துள்ளார். இதனால் சக பயணிகளுக்கும் இவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமான ஊழியர்கள் அவர்கள் அனைவரையும் சமாதானம் செய்து அமர வைத்துள்ளனர். இருப்பினும் தனது கை, கால்களை வைத்து சும்மா இல்லாமல், அருகிலிருந்தவர்களுக்கு மீண்டும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அப்போதும் தகராறு ஏற்பட தொடங்கியது. பின்னர் அவர்களே சமாதானம் செய்து கொண்டனர்.

பிறகு, இரவு நேரத்தில் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்துகொண்டே தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது விமான ஊழியரை அழைத்து மது கேட்டுள்ளார் ஜேம்ஸ். அவர்களும் அதனை கொடுத்துள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக போதை எடுத்துக்கொண்ட ஜேம்ஸ், தள்ளாடி தள்ளாடி இருந்துள்ளார். இதனிடையே அவருக்கு அவசரமாக இயற்கை உபாதையும் வர தொடங்கியுள்ளார்.

ஆனால் அவர் இருந்த போதை நிலைமையில் அவரால் கழிவறைக்கு செல்ல முடியவில்லை. இதனால் விமானத்தில் நடுவில் சிறுநீர் கழிக்க தொடங்கியுள்ளார். அப்போது விமானம் இலேசாக ஆட, தடுமாறிய இவர் சிறுநீரை அருகில் தூங்கிக்கொண்டிருந்த மீது பீச்சியுள்ளார். திடீரென்று தங்கள் மீது தண்ணீர் படுகிறதே என்று சந்தேகத்துடன் விழித்த பயணிகள், ஜேம்ஸ் சிறுநீர் கழிப்பதை கண்டு அலறினர்.

இதையடுத்து விமான ஊழியர்கள் வந்து அந்த நபரை பிடித்து தனியாக அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் பிரிஸ்பேன் நகர் வந்ததும், அவரை அங்கிருந்த விமான காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு தருதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஒரு ஆண்டு நன்னடத்தை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Also Read: "இந்திய அணியின் அடுத்த ஜாம்பவான் இவர்தான்" - இளம்வீரரை கைகாட்டிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்!