உலகம்

விமானத்தில் திடீரென அலறிய அலாரம்.. பதறிய பயணிகள்.. சிகரெட்டால் நேரவிருந்த பெரும் விபத்து தவிர்ப்பு !

இஸ்ரேலிய நகரமான டெல் அவிவ்விலிருந்து தாய்லாந்தில் பாங்காக்குக்கு El Al நிறுவனத்தின் விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அங்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சிகரெட் புகைபிடிக்கும் ஆசையை தவிக்கமுடியாததால் கழிவறைக்கு சென்று அங்கு சிகரெட்டை பற்றவைத்துள்ளார்.

அப்போது திடீரென அங்கிருந்த அலாரம் அடித்தநிலையில், பதறிப்போன அந்த பயணி சிகரெட்டை அணைக்காமல் அதனை குப்பை தொட்டியில் போட்டு கழிவறையில் இருந்து வெளியேறியுள்ளார்.குப்பை தொட்டியில் போடப்பட்ட சிகரெட்டால் அங்கிருந்த டிஸ்யூ பேப்பர்களில் தீ பற்றிக்கொள்ள அலாரம் தொடர்ந்து அலறியுள்ளது.

இதனால் உசாரான விமானத்தின் ஊழியர்கள் உடனடியாக கழிவறைக்குச் சென்று, அங்கு எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். இதனால் நேரவிருந்த பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானம் பாங்காக்கில் தரையிறங்கிய நிலையில், சிகரெட் பயன்படுத்திய பயணிக்கு விமான நிலைய போலிஸார் தரப்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

இது குறித்து வெளியான தகவலின்படி சம்மந்தப்பட்ட பயணி தாய்லாந்திலிருந்து இஸ்ரேல் திரும்பியவுடன் சட்டரீதியான பிரச்சனையை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 1972-ம் ஆண்டு பயணி ஒருவர் தீயை அணைக்காமல் சிகரெட்டை குப்பைத்தொட்டியில் போட்டதால் ஏற்பட்ட தீ விபத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 123 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் விமானத்தில் புகைபிடிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மரியாதையை காப்பாற்ற 29 ஆயிரம் தண்டம்.. ஆபாச படம் பார்த்த 83 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம் !