
பாஜக எந்த மாநிலத்தில் காலூன்ற வேண்டும் என்று நினைத்து கூட்டணி வைக்கிறதோ, அந்த கட்சிகளை அப்படியே வேரோடு சாய்த்து, பின்னர் அந்த இடத்தில் பாஜக நிற்கிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கலைத்து விட்டு, பாஜக அங்கே ஆட்சியை பிடித்தது. இப்படியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடிக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பாஜகவும் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் நிதிஷ்குமார் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் முதலமைச்சராகவும், பாஜக சார்பில் சாம்ராட் சவுத்ரி, விஜயகுமார் சின்ஹா ஆகிய இரண்டு பேரும் துணை முதலமைச்சராக பதவியேற்றனர்.

இந்த நிலையில், ஆட்சியமைந்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், பாஜகவின் தொடர் அழுத்தத்தால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த ஒருவரை பதவியேற்க முனைப்புக் காட்டி வருகிறது பாஜக. இதன் காரணமாக இன்று காலை முதலே நிதிஷ்குமாரின் வீட்டு வாசலின் முன் அவரது கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இருப்பினும் தனது சொந்த கட்சியினரை மதிக்கமல், பீகார் மாநில மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் பாஜக காட்டிய ஆசையால் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் நிதிஷ்குமார். நிதிஷின் இந்த முடிவு பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






