உலகம்

"பிரிட்டனை இந்தியாவிற்கு விற்க போகிறேன் என ரிஷி சுனக் சொல்லமாட்டார்"-இனவெறி கருத்துக்கு நெறியாளர் பதிலடி!

இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.

இவர் பதவியேற்றதும் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

ஆனால் அவரை இங்கிலாந்தில் சிலர் இனரீதியாக விமர்சித்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் வானொலி நிகழ்ச்சியில் ரிஷி சுனக்கை இனரீதியாக அவரது கட்சியை சேர்ந்த ஒருவரே விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு நிகழ்ச்சியின் நெறியாளர் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், தற்போது அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிரெவர் நோவாக்கின் ' தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், "85 சதவீத வெள்ளை மக்கள் வசிக்கும் பிரிட்டன், அவர்களை பிரதிபலிக்கும் பிரதமரையே பார்க்க விரும்புகிறது. நான் பாகிஸ்தான் அல்லது சவூதி அரேபியாவின் பிரதமராக முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த டிரெவர் நோவாக், "இனரீதியாக விமர்சனம் செய்பவர்கள் எப்பவும் காலனித்துவத்தை பாதுகாக்கிறார்கள். தாங்கள் காலனித்துவப்படுத்தப்படுவதை உணரும் வரை அதை அவர்கள் வெறும் வணிகமாகவே நினைக்கின்றனர். பிரிட்டன் மக்கள் காலனித்துவப்படவில்லை.

புதிய பிரதமரும் பிரிட்டனை சேர்ந்தவர் தான். முதல் நாளிலேயே மேடை ஏறி, நான் மொத்த நாட்டையும் இந்தியாவிற்கு விற்க போகிறேன்.இது பழிவாங்கும் நேரம், இது தான் எங்களின் திட்டம், தீபாவளி வாழ்த்துகள் எனக்கூற மாட்டார்" என்று கூறியுள்ளார். இந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: பேருந்து ஓட்டுநர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.. என்னென்ன செய்யக்கூடாது? பட்டியல் இதோ !