உலகம்

காணாமல் போன பெண்.. பல இடங்களில் தேடிய கிராமத்தினர்.. இறுதியில் பாம்பின் வயிற்றில் இருந்த சடலம் !

தெற்காசியா நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா காடுகள் அதிகள் கொண்ட நிலப்பரப்புகளில் ஒன்றாகும். உலகின் வெப்பமண்டல காடுகள் அதிகம் அங்கு இருப்பதால் பாம்புகளும் அங்கு செழித்து வளர்கின்றன. அதன்படி மிகப்பெரிதாக வளரும் மலைப்பாம்புகளும் அங்கு அதிக அளவில் இருக்கின்றன.

இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணம் பெரிய மலைப்பாம்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் ஜஹ்ரா என்ற 54 வயதான பெண் அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் வேலைசெய்து வருகிறார்.

சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்ற அவர் திடீரென காணாமல் போயுள்ளார். ஒரு நாள் கடந்த நிலையிலும் வீடு திரும்பாத நிலையில், அவரது கணவர் உள்ளிட்ட கிராமத்தினர் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.

அப்போது காட்டில் ஒரு மலைப்பாம்பு மிகப்பெரிய இரையை விழுங்கிய நிலையில், நகரமுடியாமல் கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கிராமத்தினர் அந்த மலைப்பாம்பை கொன்று அதன் உடலை வெட்டி உள்ளே பார்த்துள்ளனர். அப்போது பாம்பிம் உடலில் அந்த பெண் சடலமாக இருந்துள்ளார்.

இதன் பின்னரே அந்த பாம்பு அந்த பெண்ணை பிடித்து நெருக்கி கொலைசெய்து அவரை முழுமையாக விழுங்கியுள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த ஜம்பி மாகாண போலிஸாரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

இந்த மலைப் பாம்பு சுமார் 20 முதல் 22 அடி வரை நீளமானதாக இருந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற மலைப்பாம்பு மனிதர்களை விழுங்குவது அரிதாக நடப்பது என்றாலும், இந்தோனேசியாவில் இதுவரை இது போன்ற சம்பவங்கள் 5 முறை நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

Also Read: "பிரிட்டனை இந்தியாவிற்கு விற்க போகிறேன் என ரிஷி சுனக் சொல்லமாட்டார்"-இனவெறி கருத்துக்கு நெறியாளர் பதிலடி!