உலகம்

"பொருளாதார சிக்கலுக்கு எங்கள் தவறான கொள்கையே காரணம்" - பகிரங்க மன்னிப்பு கோரிய இங்கிலாந்து பிரதமர் !

இங்கிலாந்தின் பழமைவாத கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.

இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகியுள்ளார்.

இவர் பதவியேற்றதும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது அந்த நாட்டுக்கு மேலும் பின்னடைவை கொடுத்து பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பொருளாதார பாதிப்புகளுக்கு பிரதமர் லிஸ் ட்ரஸ்தான் காரணம் என பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், "என்னுடைய தவறான பொருளாதார கொள்கையால்தான், நாட்டின் பொருளாதாரம் சிக்கலைச் சந்தித்து வருகிறது. நாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அந்த தவறுகளுக்காக நான் வருந்துகிறேன். அதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.தற்போது பொருளாதார திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நாங்கள் முழுமூச்சுடன் செயல்படவிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Also Read: அமைச்சருக்கு பகிரங்க மிரட்டல்.. அரசியலமைப்பு சட்டத்தை அப்பட்டமாக மீறும் ஆளுநர்.. கேரளாவில் பரபரப்பு !