உலகம்

நோபல் பரிசு வென்ற Svante Paabo: பூமியில் ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சியில் புதிய திருப்பம்!

நோபல் பரிசானது உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருதானது ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 2022ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டது? யார் இவர்? என்பதை இங்கு நாம் பார்ப்போம்:-

தற்கால மனிதனை ஒத்த ஒரு இனம் பூமியில் வாழ்ந்துள்ளது. இதன் பெயர் நியான்டர்தல் (Neanderthals). இவர்கள் ஆசியா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளில் சுமார் 8 லட்சம் ஆண்டுகள் வாக்கில் வாழ்ந்துள்ளனர். இவர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோற்றியுள்ளனர். பின்னர் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் மனித இனம் (Homo sapiens)

ஆப்பிரிக்காவிலேயேதான் தோன்றியது. பின்னர் சுமார் மனித இனம் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவை விட்டுப் பிற கண்டங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்தனர். பின்னர் என்ன நடந்தது எனச் சரியாகத் தெரியவில்லை. நியான்டர்தல் இனம் மக்கள் படிப்படியாக இந்த பூமியில் வாழமுடியாமல் அழிந்து போனார்கள். ஆனாலும் மரபணு சோதனைகள் செய்ததில் ஒரு ஆச்சரியத்தை உணர்ந்தனர். ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்தில் வாழும் மக்களிடையே நியான்டர்தல் இன மரபணு 4 விழுக்காடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தற்கால மனித இனத்துடன் நியான்டர்தல் இனம் இணைந்து ஒன்றரக் கலந்து விட்டதாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் சூழலில் ஸ்வான்டே பாபோ (svante paabo) மற்றும் அவரின் கூட்டாளிகள் சேர்ந்து பண்டைய மனித இனத்தை ஆராய்ச்சி செய்தனர். அவர்கள் சைபிரியா பகுதிகளில் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டனர். காரணம் இந்த பகுதிகளில் மனித எலும்புகள் மட்டும் அல்ல எந்த உயிரினத்தின் எலும்பாக இருந்தாலும் நீண்ட காலம் சேதமடையாமல் இருக்கும். அதனில் இருந்து எளிதில் மரபணுவைப் பிரித்தெடுக்க முடியும். ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் கிடைக்கும் பண்டைய எலும்புகளிலிருந்து மரபணு பிரித்தெடுப்பது சற்று கடினமானது. காரணம் இங்கு இருக்கும் சாதகமான வெப்பநிலையில் எலும்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் தின்றுதீர்க்கப் படும். சைபீரியாவில் உள்ள கடும் குளிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் கொட்டம் அடக்கப்படும். அதனால் பண்டைய எலும்புத் துண்டுகளிலிருந்து எளிதில் மரபணுவான DNAவை பிரித்தெடுக்க முடியும்.

ஸ்வான்டே பாபோ மற்றும் அவரின் கூட்டாளிகள் சைபிரியாவில் ஒரு மனிதனை ஒத்த உடம்பின் விரல் ஒன்றைக் கண்டறிந்தனர். அந்த இனம் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது எனக் கண்டறிந்துள்ளனர். அந்த விரலின் எலும்பிலிருந்து மரபணுவான DNAவை பிரித்தெடுத்து ஆய்வு செய்தனர். இந்த ஆராய்ச்சியின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. காரணம் அந்த விரல் தற்கால மனிதனுடையது இல்லை. மேலும் நியான்டர்தல் இனத்தைச் சார்ந்ததுவும் இல்லை ! ஏன் மனிதனுக்குச் சகோதரனான மனித ( சிம்பனிசி) குரங்குகளுடையதும் இல்லை ! இந்த விரல் இதுவரை கண்டறியாத ஒரு புது மனித இனத்துடையது எனக் கண்டறியப்பட்டது. அந்த இனத்திற்கு டெனிசோவான்ஸ் (Denisovans) எனப் பெயரிட்டனர். பின்னர் இந்த இனத்தின் மரபணு கிழக்கு ஆசிய மக்களின் மரபணுவில் சுமார் 6 விழுக்காடு வரை கலந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.

ஆக, மூன்று முக்கிய மனித இனங்கள் இருந்துள்ளன. அவைகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன என்பதே இவர்களின் கண்டுபிடிப்பு. இதற்காகவே ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் ஆவர். இவர் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சியகத்தில் இயக்குநராகப் பணிபுரிகின்றார்.

- பேராசிரியர் சி சுதாகர்

Also Read: ஆணின் நிர்வாணத்தை விட பெண்ணின் நிர்வாணம் முக்கிய பிரச்சினையாக்கப்படுவது ஏன்?