உலகம்

முதல்முறையாக 264% மின் கட்டணம் உயர்வு.. இலங்கை மக்கள் மீது விழுந்த அடுத்த இடி!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில், விலை வாசிகள் உயர்ந்து உள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிவாயு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

இதனால் கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை விலக வேண்டும் என வலியுறுத்தி ஆவேசத்துடன் இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகை மக்கள் கைப்பற்றினர்.

இதனை அடுத்து கோத்தபய ராஜபச்சே, மஹிந்த ராஜபக்சே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் புதிய அதிபராக ரணில்விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.

இருப்பினும் இன்னும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்கள் ஆங்காங்கே ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ராணுவத்தைக் கொண்டு அடக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இலங்கை மக்கள் உணவுக்கு அவதிப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மேல் மற்றொரு இடி விழுந்துள்ளது. இலங்கை வரலாற்றிலேயே இல்லாத அளவு 264% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரதநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 0 - 30 யூனிட் 246% அதிகரிக்கிறது. இதன் மூலம் ம் ரூ.189ஆக கட்டணம் உயர்கிறது.

31-60 யூனிட் 211% உயர்ந்து ரூ.599 ஆகவும், ரூ.61-90 யூனிட் 125%, 91-120 யூனிட் 89%. 121-180 யூனிட் 79%" அதிகரிக்கப்பட்டுள்ளதாக: தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் 616 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதை ஈடு செய்ய இந்த மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மின் கட்டணம் உயர்வும் இலங்கை மக்கள் மீது இடியாக விழுந்துள்ளது.

Also Read: "உலகமே வியக்கும் வகையில் நடந்த செஸ் ஒலிம்பியாட்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!