உலகம்

கொரோனாவால் முடங்கிய நகரம்.. சிக்கிக்கொண்ட 80 ஆயிரம் சுற்றுலாபயணிகள்.. வெளியேற தடை விதித்த அரசு !

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று சில மாதங்களில் உலகெங்கும் பரவி தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்,இரண்டு,மூன்று என அடுத்தடுத்து கொரோனாவின் மூன்று அலைகள் பரவின.

இதனால் பெரும்பாலான உலகநாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. கொரோனா அறிகுறி இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனாவால் உயிரிழப்பு பல மில்லியனை கடந்தது. கொரோனா ஊரடங்கால் பெரும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தின. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தன. எனினும் அரசுகள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில், தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒன்று, இரண்டு பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்நாட்டு அரசு ஒட்டுமொத்த நகரத்திற்கே லாக்டவுன் அறிவித்து, அனைவரையும் பரிசோதனை செய்து வருகிறது.

அங்குள்ள சன்யா என்ற இடம் பிரசித்தி பெற்ற சுற்றுலத் தளத்தில் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இந்த நகரத்துக்கு லட்சக்கணக்கான சுற்றுலாபயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் அங்கு உடனடியாக லாக்டவுன் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இதனால் அந்த நகரத்தில் மட்டும் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் ஒரு வாரத்திற்குள் ஐந்து கோவிட் பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம் சுற்றுலாவாசிகள் தங்கியிருக்கும் விடுதிகள் 50 சதவீத டிஸ்கவுன்ட் கட்டணத்தில் அவர்களை தங்க வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பணக்காரர்களுக்கு 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி.. அரசின் முன்னுரிமை யாருக்கு? பாஜக எம்.பி விமர்சனம் !