உலகம்

“டெலிவரி நிறுவனங்களினால் அதிகரிக்கும் காற்று மாசுபாடு..” : ஆய்வு முடிவில் வெளியான ‘பகீர்’ தகவல் !

சென்னை,பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மின்னணு வர்த்தக நிறுவன, விநியயோக வகனங்களால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக Stand.earth ஆய்வு நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, Stand.earth ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா, ஐரோப்பியா, வடக்கு அமெரிக்காவில் உள்ள 90 வர்த்தக விநியோக நிறுவங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மின்னணு வர்த்தக துறையில் உள்ள சங்கிலி தொடர்புகளில், வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் முக்கிய பணியில் விநியோக வாகனங்கள் (Last Mile Delivery ) ஈடுபடுகின்றன.

2030ல் இந்தியாவில், மின்னணு வர்த்தக சந்தையின் மதிப்பு $350 பில்லியனை எட்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில், சுற்றுச்சூழலில் இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமாகிறது.

Stand.earth ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளை Clean Mobility Collective என்ற அமைப்பு சான்றளித்துள்ளது. UPS, FedEx, Amazon, DTDC, Flipkart (Ekart), DHL, CUITGOT முன்னணி நிறுவனங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் இந்த 6 நிறுவனங்களுக்காக இயக்கப்படும் விநியோக வாகனங்களின் கார்பன் உமிழ்வு மட்டும் 4.5 மெகாடன் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இது 10 லட்சம் பெட்ரோல் வாகனங்கள் ஓராண்டுக்கு வெளியிடும் கார்பன் உமிழ்வுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்பன் உமிழ்வை குறைக்கவும், பூஜிய உமிழ்வு என்ற இலக்கை எட்டவும், அந்த நிறுவனங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்த Stand.earth Research Group அமைப்பின் முக்கிய ஆய்வாளரான Greg Higgs, பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் விநியோக வாகனங்களின் கார்பன் உமிழ்வு குறித்து பேச விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.

குறிப்பாக, விநியோக வாகனங்கள் மொத்த கார்பன் உமிழ்வில் 6 பெரு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது 66% என்றும் Greg Higgs குறிப்பிடுகிறார். சர்வதேச ஆய்வின் அங்கமாக இந்தியாவில் இயங்கும் முக்கிய மின்ன ணு வர்த்தக நிறுவனங்களான Amazon, Flipkart, Delhivery, DTDC India, Blue Dart Express, Shadowfax, Ecom Express போன்ற நிறுவனங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதில், வினியோக முகவர்கள் பயன்படுத்தும் வாகனங்களில், 50%க்கும் அதிகமான வாகனங்கள் மின்னணு வர்த்தக நிறுவனத்தை சேர்ந்தவையாக உள்ளது. இந்த வாகனங்களே கார்பன் உமிழ்விலும் பெரும் பங்கு வகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, நகரங்களில் இயங்கும் விநியோக வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயு, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளை விட அதிமாக உள்ளது. இந்தியாவில், ஒரு பொருளை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க இயக்கப்படும் விநியோக வாகனம் சராசரியாக 285 கிராம் கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.

இது சர்வதேச நாடுகளின் சராசரியான 204 கிராம் என்ற அளவில் இருந்து 40% அதிகம் என்றும் இந்த ஆய்வு உறுதி செய்கிறது. இதனால், இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று Clean Mobility அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சித்தார்த் ஸ்ரீனிவாஸ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் வளர்ச்சியடைந்த நிறுவனமாக இருக்கும் Flipkart, 2030ல் தன்னுடைய விநியோக வாகனங்களை முழுமையாக, மின்சார வாகனங்களாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இது மின் வாகனங்களின் பயன்பாடை நோக்கிய இந்திய அரசின் பயணத்திற்கு மிகச்சிறந்த தொடக்கமாகவும் அமையும்.

மேலும் நிதி ஆயோக்கின் ஷுன்யா பிரச்சாரத்தின் நோக்கமான விநியோக துறையில் மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. டெல்லி, மகாராஸ்டிரா போன்ற மாநிலங்கள் விநியோக வாகனங்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வை முற்றிலும் குறைப்பதற்கான கொள்கைகளையும் வகுக்க தொடங்கியுள்ளது.

மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்காக தினசரி இயக்கப்படும் இலட்சக்கணக்கான வாகனங்கள், காற்று மாசை அதிகரிப்பதுடன், சுற்றுச்சுழலையும், மக்களின் உடல் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பூஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை நோக்கிய பயணத்திற்கும் தடையாக உள்ளது. இதை தவிர்க்க, விநியோக நிறுவனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைக்க உரிய இலக்கும், திட்டமிடுதலும், அவசியம் என்றும் சித்தார்த் குறிப்பிடுகிறார்.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள, Head of Business Actions India, Climate Group அமைப்பின் தலைவரான அதுல் முதலியார், மின்னணு வர்த்தக நிறுவங்களின் விநியோக பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால், இந்த வாகனங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பெரும்பாலும் பலர் கவனிக்க தவறுவதாக குறிப்பிடுகிறார்.

ஆனால் இத்துறையின் அங்கமாக இருக்கும் விநியோக வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கருத்தில் கொண்டு அதை பெருமளவு குறைப்பதற்கான நடவடிக்கைகளை பெரிய நிறுவனங்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். அதற்கு வணிக நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதுல் முதலியார் வலியுறுத்துகிறார்.

பிளிப்கார்ட், 2030இல் தன்னுடைய விநியோக வாகனங்களை 100% மின் வாகனமாக மாற்றுவதாக இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மற்ற பெரிய நிறுவனங்களும் இது போன்ற இலக்கை நிர்ணயிப்பதுடன், வெளிப்படைத்தன்மையுடன் அதை நோக்கிய பயணத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்துள்ளது.

Also Read: மாறும் காலநிலை... அதிகரிக்கும் மாசு.. சிக்கலில் இந்தியத் தலைநகர் டெல்லி - என்ன செய்யப்போகிறது அரசு ?