உலகம்

அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கண்டெடுக்கப்பட்ட பணம்.. அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இலங்கையை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி, அத்தியாவசியப் பொருள்கள் கூட கிடைக்காமல் , வாழ்வாதாரத்தையே சீரழித்ததால் கொந்தளித்த இலங்கை மக்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி வில கக்கோரி அந்நாட்டு அதிபர் மாளிகையை கைப்பற்றி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் ஆவேசத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். தற்போது இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே உள்ளார். இவரின் சகோதரர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே அதிபராகவும் பிரதமராகவும் இருந்தவர். ராஜபக்சேக்கள் முன்னெடுத்த பெரும்பான்மை இனவாத அரசியல், மக்கள் விரோத நடவடிக்கை களால் இலங்கை நாடு கடும் பொருளா தார நெருக்கடிக்குள் சிக்கித் திணறுகிறது.

மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட் கள் கூட கிடைக்கவில்லை. கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் கொந்தளித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்திற்கு பணிந்து, மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார். ஆனாலும் பொருளாதார நெருக்கடி சீராகவில்லை. இதனால் மேலும் ஆவேசமடைந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்நிலையில், ஜூலை 9 அன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் மாளிகையை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்புப் படையினர் திணறி வருகின்றனர். மக்களின் ஆவேச எழுச்சிக்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த மக்கள் அங்கிருந்த அறைகள் மற்றும் நிச்சல் குளங்களைப் பயன்படுத்தினர். மேலும் அரசு இருக்கையை கைபற்றியதை வெளிப்படும் விதமாக இருக்கையில் அமர்ந்து விதவிதமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவமும் அரங்கேறியது.

அதுமட்டுமல்லாது அதிபர் மாளிகையில் இருந்த பதுங்கு குழிக்குள் புகுந்த மக்கள் அங்கிருந்த பொருட்களை சோதனை செய்தபோது, கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்டெடுக்கப்பட்ட பணத்தை எண்ணி, போராட்டக்காரர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். போராட்டக்காரர்கள் அரசு பணத்தை மக்களுக்கு முறையாக செலவு செய்யும் நோக்கில் எடுத்தப்பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ராஜபக்ஷேக்களின் முகமூடியை சிங்களவர்களே கிழித்தெறிந்து விட்டார்கள்.. இலங்கைக்கு வரலாறு தருகிற பாடம் இது !