உலகம்

குடியால் நேர்ந்த கொடுமை.. பல லட்சம் பொதுமக்களின் விவரங்களை தொலைத்த ஊழியர்! பின்னணி என்ன?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா காரணமான பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலை சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நாடுகளும் நிவாரணம் வழங்கின. இதைப்போலவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஜப்பான் அரசும் நிவாரண உதவியை வழங்கியது.

அதன்படி ஜப்பானில் உள்ள அமகாசாகி என்ற பகுதியில் கொரோனா நிவாரணத் தொகைகள் வழங்குவதை மேற்பார்வையிட ஒரு தனியார் ஒப்பந்தக்காரர் பணியமர்த்தப்பட்டார். அவர் பொதுமக்களின் தகவல்கள் அடங்கிய டேட்டாவை மாற்ற மெமரி டிரைவ் ஒன்றை தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஒரு மதுபான விடுதியில் சக ஊழியர்களுடன் மது அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்திய அவர் பொதுமக்கள் தகவல் அடங்கிய மெமரி டிரைவ்வினை அங்கேயே மறந்து வைத்துவிட்டு வந்துள்ளார்.

இது அடுத்த நாளே அவருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அந்த மதுபான பாருக்கு சென்ற அவர் அங்கு மெமரி டிரைவ் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக இது குறித்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மெமரி டிரைவ்வில் அமகாசாகி நகரத்தில் உள்ள பல லட்சம் மக்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பிறந்த தேதிகள்,வங்கிக் கணக்கு எண்கள் போன்ற முக்கிய குறிப்புக்கள் இருந்துள்ளது. இதன் காரனமாக இந்த சம்பவம் அந்த நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேலை இந்த தகவல் தவறானவர்கள் கையில் சிக்கினால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழலும் நிலவுகிறது. இந்த நிலையில் காணாமல் போன மெமரி டிரைவ் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நகர தலைவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

Also Read: “இதை செய்தால்தான் ரூ.90 கோடி சொத்து கிடைக்கும்” - அருணாச்சலம் பட பாணியில் மகளுக்கு கண்டிஷன் போட்ட தந்தை!