உலகம்

“எனது மார்பகங்களை நான் பெருமையாக பார்க்கிறேன்” - வைரலாகும் முன்னாள் MP கூறிய கருத்து.. நடந்தது என்ன?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னாள் பிரதமர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக மக்கள் களத்தில் இறங்கி போராடினர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜபக்சே பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கா என்பவர் புதிய பிரதமர் ஆனார். ரணில் விக்ரமசிங்கா பதவியேற்றவுடன் இலங்கையின் நிலையை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக நேற்று முன்தினம் 'ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திரவும் கலந்து கொண்டார்.

இதனால் பிரதமர் வீட்டிற்கு செல்ல முடியாத வகையில், காவல்துறையினர் கடும் பாதுகாப்பு வேலிகளையும் அமைத்திருந்தனர். அப்போது கூட்டநெரிசலில், காவல்துறையினருக்கும் போராட்டடக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அந்த கைகலப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிலர், ஹிருணிகா பிரேமசந்திராவின் மார்பகங்கள் குறித்து அருவருக்கத்தக்க தவறான பதிவுகளை வெளியிட்டிருந்தனர். இந்த புகைப்படத்துடன் கூடிய பதிவுகள் வேகமாக பரவிய நிலையில், இது குறித்து ஹிருணிகா தனது சமூக வலைதளபக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமை அடைகின்றேன். நான் மூன்று அழகிய குழந்தைகளுக்கு இதனூடாக தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, எனது முழு உடலையும் அவர்களுக்கு அர்ப்பணித்தேன்.

(காவல்துறையினருடனான மோதல் காரணமாக) வெளியில் தென்பட்ட எனது மார்பகங்களை வைத்து கிண்டல் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருந்த போது, அவர்களின் தாய்மார்களின் மார்பகக் முலைக்காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியும், எனது மார்பகங்கள் குறித்து நீங்கள் பேசி, மீம்ஸ்களை உருவாக்கி, சிரிக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்பது உங்களுக்கு தெரியவரும்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

தனது மார்பகங்கள் குறித்து தவறான கருத்துக்கள் உருவான நிலையில், ஹிருணிகா பிரேமசந்திரா கொடுத்துள்ள பதிலடிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து இலங்கை பிரதமர் ரணில், "ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது. எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும். அரசியல் விசயமாக தான் ஹிருணிகா தனது போராட்டம் செய்தார். எனவே அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் ஹிருணிகா பிரேமசந்திர, தற்போது ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகவும் போராட்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: “இனி தனியார் பள்ளியிலும் 25% இட ஒதுக்கீடு கட்டாயம்..” : ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!