உலகம்

நிறவெறியின் உச்சம்.. இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு - கறுப்பினத்தவர்கள் 10 பேர் பரிதாப பலி !

1) மேம்பாலத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் புரோவர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். இந்த விமானம் மியாமி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, விமானி விமானத்தை அங்குள்ள ஒரு மேம்பாலத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். அதன்படி விமானம் மேம்பாலத்தில் அவ சரமாக தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக ஒரு காரின் மீது மோதியது. அதன்பின்னர் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

2) ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் - நேட்டோ தலைவர்

ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்று நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார். ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது. பெர்லினில் நடந்த அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி அன்னலெனா பேர்பாக், உக்ரைன் தற்காப்புக்கு தேவைப்படும் வரை ராணுவ உதவியை ஜெர்மனி வழங்குவதாக கூறினார்.

ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என்றும், உக்ரைன் படையினர் தங்களது தாயகத்தை பாதுகாக்க தைரியமாக போரிட்டு வருவதாகவும்,நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

3) கொடி விற்பனையில் இலங்கை ஆட்டோ ஓட்டுனர்கள்...

வரலாறு காணாத வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால், கொழும்புவை சேர்ந்த டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்க்கை தேவைக்காக தற்போது தேசிய கொடிகளை விற்கும் பணியில் இறங்கி உள்ளனர். போராட்டம் நடைபெறும் கல்லே பேஸ் பகுதியில் அவர்கள் இலங்கை தேசிய கொடியை விற்று பிழைப்பு நடத்துகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கைவாசிகள், இரக்கப்பட்டு இவர்களை போன்றவர்களிடம் இருந்து கொடிகளை வாங்குகின்றனர்.

4) நியூயார்க்கில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூடு!

நியூயார்க் நகரின் சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கறுப்பினத்தவர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் நிறவெறியால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பப்பல்லோ போலீஸ் கமிஷனர் ஜோசப் கிரமக்லியா செய்தியாளர்களிடம், "துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கறுப்பினத்தவர்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நிறவெறி தீவிரவாத தாக்குதல்.” என்று கூறியுள்ளார்.

5) மீண்டும் எரிபொருள் விநியோகத்தை தொடங்கிய உக்ரைன்!

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் கார்கிவ் நகரத்தின் மீது நடத்தி வந்த தாக்குதலில் இருந்து நேற்று பின் வாங்கியது. இதனால் கார்கிவ் நகரத்தில் இருந்து வழங்கப்பட்டு வந்த எரிபொருள் விநியோகத்தை மீண்டும் உக்ரைன் தொடங்கியுள்ளது. போரினால் சேதமடைந்த 2 விநியோக நிலையம் சரி செய்யப்பட்டு, 3000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.