உலகம்

“கேஸ், டீசலை பதுக்கி வைத்திருந்த ராஜபக்சே கும்பல்” - அதிரடியாக மீட்டு பகிர்ந்தளித்த போராட்டக்காரர்கள் !

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். தங்களின் வாழ்வாதாரமே கேள்விக் குறியான நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் எடுத்த தவறான முடிவுகள் தான் காரணம் என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதன் விளைவாக, ஏற்கனவே ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய நிலையில், நேற்று மகிந்த ராஜபக்சேவும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில், ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வன்முறை அதிகரித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிஸார் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது. அதுமட்டுமின்றி கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களைக் கிழித்தெறிந்து தாக்குதல் நடத்தியதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே கொழும்புவின் புறநகர் பகுதியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது காரில் சென்றுக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் அமரகீர்த்தி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மகிந்த ராஜபக்சேவின் வீட்டை தீ வைத்துக் கொளுத்தியதால் இலைங்கையில் பெரிய அளவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பில் போராட்டம் தீவிரமடைந்ததையொட்டி , அதிக அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் ராஜபக்சே வன்முறையை தூண்டியதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருந்தனர். அவரது மகள் யோசிதா வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில், ராஜபக்சேவின் மனைவியும் ஹெலிகாப்டர் மூலம் திம்பிரிகஸ்யாக போலிஸ் மைதானத்தில் இருந்து திருகோணமலைக்கு தப்பி ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் திருமலையில் உள்ள படை முகாமில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும், ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இதுவரை சுமார் 1 எம்.பி மற்றும் 2 போலிஸ் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாலும், ஆங்காங்கே பொது சொத்துக்கள் எரிக்கப்படுவதாலும் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வீட்டில் கேஸ்,டீசல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சமல், மஹீபால ஹேரத்,ஜொன்ஸ்டன் வீடுகளில் கேஸ் சிலிண்டர்கள், ரசாயன உரம், டீசல், பருப்பு போன்ற ஏராளமான அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிப்பட்டுள்ளது. சுமார் 140 கேஸ் சிலிண்டர்கள் குருநாகலையில் உள்ள ஜொன்ஸ்டன் மற்றும் துஷார சஞ்சீவ வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை தலைவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக வந்த தகவலுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Also Read: “ராஜபக்சே தந்தை சிலை தகர்ப்பு.. குடும்பத்தோடு தப்பிக்க திட்டம்?” : வன்முறையால் ரத்தக்களரியான இலங்கை!