உலகம்

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர்.. மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்! #5IN1_WORLD

இலங்கைக்கு வந்தடைந்தது 40 ஆயிரம் டன் டீசல்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவின் உதவியை அந்நாட்டு அரசு நாடியது. இந்தியா வந்த இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்தியா அறிவித்த கடன் வரம்புக்கு கீழ் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.

ஒரு மாதமாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சடலம்!

இத்தாலியில் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்த வந்தவர் சார்லோட் ஆங்கி (26), இவர் ஆபாசப் பட நடிகை ஆவார். கடந்த மார்ச் 11 முதல் இவர் காணவில்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போலீஸில் புகார் தெரிவித்திருந்தனர். விசாரணையின் முடிவில், அவரது பக்கத்து வீட்டுக்காரரான போட்டோகிராபர் ஃபோன்டானா (43) என்பவர் அவரை கடத்திச் சென்றதாக தெரியவந்தது. நடிகையை தனது வீட்டுக்கு வரவழைத்து, பிறகு அவரை சுத்தியால் அடித்துக் கொன்றுவிட்டு சடலத்தை ஃபிரிட்ஜில் அடைத்து வைத்திருக்கிறார். ஒரு மாதத்துக்குப் பிறகு சடலத்தை துண்டு துண்டாக வெட்டி தீயில் கொளுத்தி, சடலத்தின் கழிவுகளை சாக்குப்பையில் போட்டு சாலையில் தூக்கி வீசியுள்ளார். போலிஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகருக்கு அபாசியா நோய்!

ஹாலிவுட்டில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வருபவர், புரூஸ் வில்லிஸ். ‘தி வெர்டிக்ட்’, ‘டை ஹார்ட்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்ற அவர், எம்மி உள்பட பல விருதுகள் பெற்றுள்ளார். தற்போது அவர் அபாசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மகள் ருமர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் ‘அபாசியா நோய் தாக்கத்தால் அவரது அறிவாற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் சினிமாவில் இருந்து விலகுகிறார். விரைவில் அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வில் ஸ்மித்!

94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. விழாவில் சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அமைப்பு நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில், வில் ஸ்மித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட போப் பிரான்சிஸ்!

கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த அநியாயத்துக்காக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். வாடிகனில் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியபோது, “நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன். கனடா பேராயர்களுடன் இணைந்து நான் மன்னிப்பு கோருகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

Also Read: “பாகிஸ்தான் ராணுவம் கொடுத்த 3 ஆப்ஷன்கள்.. எனது உயிருக்கு ஆபத்து” : உண்மையை போட்டு உடைத்த இம்ரான் கான்!