உலகம்

"பதுங்கு குழிகளின் பட்டியல் கூகுள் மேப்பில் இருக்கு” : உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு அரசு அறிவுறுத்தல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், திடீரென ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து ரஷ்ய ராணுவம், உக்ரைனில் போரைத் தொடங்கி, கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களைத் தாக்கி வருகின்றன. மேலும், உக்ரைன் தலைநகர் கீவில் நுழைந்து அந்நகரைக் கைப்பற்றியுள்ளது ரஷ்ய ராணுவம்.

உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவம் ஊடுருவி உக்கிரமான தாக்குதலை நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் சூழ்ந்துள்ளதால் உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

அதில், ‘உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் இருப்பது உங்களுக்குத் தெரியும். மக்கள் வெளியே வருவது கடினம். தலைநகர் கீவில் தங்குவதற்கு இடமின்றி தவிக்கும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். சில இடங்களில் ஏர் சைரன்கள், வெடிகுண்டு எச்சரிக்கைகள் கேட்கின்றன.

நீங்கள் அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால், அந்தந்த இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். அவரவர் தங்கியிருக்கும் இடங்களின் அருகில் உள்ள பதுங்கு குழிகளின் பட்டியல் கூகுள் மேப்பில் உள்ளது. அவற்றில் பல நிலத்தடி மெட்ரோ நிலையங்களில் அமைந்துள்ளன. ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும்போது அந்த பதுங்கு குழிகளில் தங்கிக் கொள்ளுங்கள்.

தயவுசெய்து உங்கள் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள். உங்கள் ஆவணங்களை எல்லா நேரங்களிலும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்” என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், +91 11 23012113 , +91 11 23014104, +91 11 23017905 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்நாடு திரும்ப 044-2851 5288, 96000 23645 மற்றும் 99402 56444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read: “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை காப்பாற்றுங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!