உலகம்

பிரதமராக பதவியேற்ற 7 மணி நேரத்தில் பதவி விலகிய சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர்.. இதுதான் காரணமா?

சுவீடன் நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் பிரதமர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியடைந்தார். இதையடுத்து ஸ்டெஃபான் லோஃப்வென் ஆளும் சமூக கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

பின்னர் சமூக கட்சியின் புதிய தலைவராக நிதியமைச்சர் மக்டலேனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார். இதனால் நாடாளுமன்றத்தில் மக்டலேனா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 117 எம்.பி.கள் மக்டலேனா ஆன்டர்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவருக்கு எதிராக 174 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதனால் அவர் புதிய பிரதமாக தேர்வு செய்யப்பட்டார்.

சுவீடன் நாட்டு அரசியல் அமைப்பு சட்டப்படி,பிரதமராகப் பதவியேற்கப் பெரும்பான்மை தேவையில்லை. பிரதமருக்கு எதிராக 175 எம்.பி.,க்கள் வாக்ளிக்காமல் இருந்தால் போது. வாக்கு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர் பிரதமராக முடியும். இதனால்தான், 174 எம்.பி.கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அரசியல் அமைப்புச் சட்டப்படி பிரதமராக மக்டலேனா ஆன்டர்சன் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையடுத்து இவர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், இவர் தாக்கல் செய்த பட்ஜெட் தோல்வியடைந்தது. மேலும் கூட்டணி கட்சிகளும் ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் பிரதமராகப் பதவியேற்ற 7 மணி நேரத்திலேயே மக்டலேனா ஆன்டர்சன் பதவியை ராஜினாமா செய்தார்.

இருப்பினும் மீண்டும் தான் ஆட்சி அமைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராக ஆவேன் என மக்டலேனா ஆன்டர்சன் தெரிவித்துள்ளார். ஏழு மணி நேரம் மட்டுமே பிரதமராக இருந்தாலும், சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை மெக்டலேனா ஆன்டர்சன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மகன்.. வீட்டிலேயே மருந்து தயாரிக்கும் தந்தை : சீனாவில் ஒரு பாசப் போராட்டம்!