உலகம்

ஹாயாக உலா வந்து கொரோனா பரப்பிய இளைஞருக்கு கடும் தண்டனை கொடுத்த வியட்நாம் அரசு!

சீனாவின் வுஹானில் 2019ம் ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை பீடித்து அவதியடைய வைத்திருக்கிறது.

கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் இன்றளவும் மடிந்துக்கொண்டிருக்கிறார்கள். அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் அலை அலையாக இந்த கொரோனா பரவல் தொடர்ந்து வருகிறது.

இருப்பினும் சில நாடுகள் முதல் அலையில் தப்பித்தால் இரண்டாவது அலையில் சிக்குவதும் முதல் அலையில் சிக்கிய பின் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்த அலைகளின் போது தப்பிக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது.

அவ்வகையில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியட்நாம் நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரியின் போது பரவிய கொரோனாவை திறமையான முறையில் கையாண்டு தொற்றைக் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போதைய நிலைமையோ கைமீறி போய்க்கொண்டிருக்கிறது. அதன்படி வியட்நாமில் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் தொடங்கிய கொரோனா பரவலால் நான்கரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய நபர் ஒருவருக்கு அந்நாட்டு அரசு கடுமையான தண்டனையை விதித்துள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் என்ற பகுதியில் இருந்து கா மவ் நகருக்கு வந்த லீ வன் ட்ரி என்பவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சுற்றித் திரிந்ததால் அவரால் எட்டு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

Also Read: “இனி குடிக்கவே மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமின்.. நீங்க தயாரா?” : மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி!