உலகம்

மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் பலி... நடந்தது என்ன? : ஜப்பான் அரசு விளக்கம்!

மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் ஜப்பானில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்துள்ளதாகவும்,

தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மருந்துக் குப்பிகளில் கலப்படம் இருப்பதாகக் கூறி ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 16.3 லட்சம் டோஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

மாடர்னா தடுப்பூசியின் சில டோஸ்களில் மருந்து அல்லாத வேறு கலப்பட பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

ஸ்பெயினில் உள்ள உற்பத்தி ஒப்பந்தத் தளம் ஒன்றில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இது நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், இதுகுறித்து ஆய்வு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று பேட்ச் மருந்துகளை மாடர்னா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக ஜப்பானில் மாடர்னா தடுப்பூசியை விநியோகம் செய்யும் நிறுவனம் தெரிவித்தது.

கடந்த மே மாதம்தான் ஜப்பானில் மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜப்பான் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கலப்பட தடுப்பூசியால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ளோம்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!