உலகம்

இனி ஆப்கன் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் : சூளுரைக்கும் தாலிபன்கள்; விழிபிதுங்கி நிற்கும் மக்கள்!

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து அந்நாட்டில் இருந்த மக்கள் மற்றும் பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்ற நோக்கில் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். காபூல் விமான நிலையத்திலேயே தஞ்சமடைந்துள்ளதால் அங்கும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இப்படி இருக்கையில் ஆப்கன் தங்களது கட்டுக்குள் வந்ததை அடுத்து முதல் முறையாக தாலிபான்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு அறிவிப்புகள் வாய்மொழி வார்த்தையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில், “ஆப்கான் மண் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தப்படாது. மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்.

Also Read: ”எங்கள் குழந்தைகள் பாலுக்குச் சாகிறார்கள்.. நீங்கள் அமைதிகாக்கிறீர்கள்”: பெண் இயக்குனர் உருக்கமான கடிதம்!

தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். ஷரியத் விதிமுறைகள்படி பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். முஸ்லீம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படும்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து எல்லைகளும் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளன. ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து ஆப்கான் குடிமக்களும் எங்களது சகோதரர்கள்தான். அச்சமின்றி அவர்கள் வாழ்க்கையைத் தொடரலாம்.

ஷரியத் சட்டப்படி அனைவருக்கும் உரிமைகள் வழங்கப்படும். கடந்த 20 ஆண்டு அனுபவங்கள் மூலம் தாலிபான்கள் பெருமளவுக்கு மாறியுள்ளனர். பாகிஸ்தான், ரஷ்யா, சீனா நாடுகள் நல்ல உறவுகளை வைத்துள்ளன. ஆனால் அவர்கள் எதிலும் தலையிடவில்லை. புதிய அரசை கட்டமைப்பதில் விரைவாக செயல்பட்டுவருகிறோம். அரசியல் கட்டமைப்பை உருவாக்க தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.” இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

Also Read: US Army கட்டுப்பாட்டுக்குள் காபூல் ஏர்போர்ட்.. அமெரிக்காவின் உதவியை நாடிய இந்தியா? ஆப்கனில் நடப்பது என்ன?