உலகம்
ஒலிம்பிக் தொடர் முழுமையாக நடக்குமா? : அதிகரிக்கும் கொரோனா பரவலால் அச்சத்தில் ஜப்பான்!
உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று உலகம் முழுவதும் குறைந்ததை அடுத்து ஒரு வருடம் கழித்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் என உலகின் பல நாடுகளிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்துள்ளனர்.
ஒலிம்பிக் தொடர் துவங்குவதற்கு முன்பே வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போதே சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இருந்தபோதும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி ஒலிம்பிக் போட்டியை நடத்தலாம் என ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தது. மேலும் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் எப்போது வேண்டுமானாலும் போட்டி நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஒலிம்பிக் தொடர் துவங்குவதற்கு முன்பு அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் நடைபெற்று வரும் டோக்கியோ நகரத்தில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவுக்குப் பதிவாகியுள்ளது. ஜூலை 27ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் 2848 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஒலிம்பிக் தொடர் நடைபெறும் கிராமத்தில் மட்டும் 160 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள நிலையில், கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் தற்போது ஒலிம்பிக் போட்டி முழுமையாக நடத்தப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மேலும் டோக்கியோ நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியைத் தடை செய்ய வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த கொரோனாவை சமாளித்து ஒலிம்பிக் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்குமா என்பதே ஜப்பானுக்கு இருக்கும் சவாலாகும்.
Also Read
-
“Online,Offline இரண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!