உலகம்

“உருகும் பனிப்பாறை : உலக நாடுகள் ஒன்றுபடவில்லை என்றால் நாம் அழிந்துபோவோம்” : சூழலியல் போராளிகள் ஆவேசம்!

காலநிலை மாற்றத்தின் காரணமாக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது என ஐ.நா முன்பே எச்சரித்தது.

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புவியின் தென்பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகா எப்போதும் உறைந்த கண்டமாகவே காட்சியளிக்கும். உலகிலேயே அதிகமான நன்னீர் பனிப்பாறைகள் அங்குதான் உள்ளன. சுமார் 70 சதவீத நன்னீர் அண்டார்டிகாவில் உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்க பெரும் கவசமாக செயல்படும் அண்டார்டிகா அதன் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

உலகிலேயே கோடைக்காலங்களில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தான் அதிக வெப்பத்தைச் சந்திக்கும். சுமார் 39 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமே அதிகம் எனக் கூறபடும் நிலையில், அந்த வெப்பத் தாக்கதை விட அதிக வெப்பத்தை அண்டார்டிகா சமீபத்தில் சந்தித்துள்ளது.

அதாவது அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவில் 65 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் மிகப் பெரிய பனித்துண்டு ஒன்று உடைந்து விழுந்ததாகவும் அதன் அளவு பாரிஸ் நகரத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பாக மேற்கொண்ட ஆய்வின்போது, கடலில் பனிப்பாறை மூழ்கிய செயற்கைக்கோள் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். மேலும், வெப்ப நிலை காரணமாக சிறிது சிறிதாக உருகி வந்த பிரம்மாண்ட பணிப்பாறைகள் கடந்த 27ம் தேதி முற்றிலுமாக உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறுகையில், “ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. தீவிரமாகுமாக உருகும் பனிப்பாறைகளால் கடல் நீர் மட்டம் உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிரீன்லாண்டில் உருகும் பனிப்பாறைகளால் கடல் மட்டம் சுமார் 0.006 அடி அதாவது 1.5மி.லி உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, 2019-ம் ஆண்டில் கிரீன்லாந்தில் ஏற்பட்ட பனிப் பொழிவும்கூட வழக்கத்தைவிட மிகவும் குறைவாகவே இருந்துள்ளது. தற்போது இந்த பனிப்பாறைகள் உருகும் விகிதம் 1985 மற்றும் 1999ம் ஆண்டு ஏற்பட்டதைவிட 14 சதவீதம் அதிகமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேப்போல்,புவி வெப்பமயமாதல் தொடர்பாக ஜெர்மனியின் ஆல்ஃப்ரெட் வெக்னர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியிலாளர் சாச்கென் கூறுகையில்,“வரலாற்றில் இல்லாத அளவு மிக அதிக வெப்ப நிலை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியப் பகுதியில் உள்ள மரணப் பள்ளத்தாக்கில்(Death Valley) கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி 54.4 டிகிர் செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இதற்கு முன்பு குவைத்தில் 2011ல் ஏற்பட்ட 53.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையைவிட, தற்போது அமெரிக்காவில் ஒரு டிகிரி அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதனால், ஆர்டிக் பகுதியின் வெப்பநிலை, முதன்முறையாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்தது.

இதனால் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பனித்தகடுகளை கொண்ட ஆர்டிக் பகுதியின் பனித்தகடுகள் கிரீன்லாந்தின் பரப்பளவில் பாதியை மூடும் அளவுக்குப் பெரியது. இந்த பனித்தகடுகள் மற்றும் பனிப்பாறைகள் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக உருகும் அளவைவிட,தற்போது 60 ஜிகா டன் அளவுக்கு உருகியுள்ளது. இதனால் கடல் மட்டம் உயர்த்துவதோடு பல்வேறு கடலோர நகரங்கள்ஆபத்தைக் எதிர்நோக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். சுற்றுச்சுழல் ஆர்வலரான ரோஸ் கிரேக், சிறு வயதில் இருந்தே பருவநிலை மாற்றம், இயற்கையின் அழிவு பற்றி பல்வேறு விழிப்புணர்வு போராட்டங்கள் நடத்தியவர்.

இந்நிலையில், அவர் பருவநிலை மாற்றத்தால் ஆர்டிக் கடலில் ஏற்படும் பாதிப்பு குறித்து அங்கு பதாகை எந்தி போராட்டம் நடத்தினார். இத்தகைய இயற்கை எழிலை காப்பாற்ற உலக தலைவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள சூழலியல் ஆர்வலர்கள் உலக தலைவர்கள் காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தி பல்வேறு வகையில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர்.

ஐ.நாவும், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் எனவும் இல்லையென்றால் நாம் அழிந்துவிடுவோம் என கடந்த வாரம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறுகையில், “புவி வெப்பமயமாதலை தடுக்க எரிசக்தி, போக்குவரத்து, ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டுவர கொரோனா தொற்றை ஒரு ஊக்கமாக கொள்ளவேண்டும்.

மேலும் உலக சக்திகள் ஒன்றிணைந்து பசுமையான எதிர்காலத்திற்காக தங்கள் பொருளாதாரங்களை மீட்டெடுக்க வேண்டும் அல்லது மனிதநேயம் அழிந்துபோகும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் நாடுகள் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாததற்கு பொது செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை கையாண்டது போன்றே பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை : அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் - காலநிலை எச்சரிக்கை!