உலகம்

சீனாவில் பரவும் அடுத்த தொற்று - காட்டு அணில் கறி தின்றதால் நோய் பரவல்!

வடக்கு சீனாவில், புபோனிக் பிளேக் நோய் பரவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலியா என்ற மாகாணத்தில் பையனூர் என்ற நகரில், சகோதரர்கள் இருவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் இருந்து, புபோனிக் (வேகமாக பரவும் வகை) பிளேக் நோயாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனையடுத்து, மூன்றாம் எண் நோய் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு, மக்கள் பின்பற்றுமாறு சீன அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க, விதிமுறைகளை இந்த ஆண்டின் இறுதி வரை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் காட்டு அணில் கறியை உண்டதாலேயே இந்த பிளேக் நோய் அவர்களுக்கு தொற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் காட்டு அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

இந்த புபோனிக் பிளேக்கானது, எலி போன்ற கொறிக்கும் வகை உயிரினங்களில், வாழும் உன்னிகளின் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை பாக்டீரியா. ஆகையால் மக்கள் அவ்வகை பிராணிகளை உட்கொள்ள வேண்டாம் என அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது உயிரிழந்த இருவருடன் தொடர்பில் இருந்து 146 பேரை தனிமைப்படுத்தி அவர்களின் உடல் நிலையை சீன அரசு கண்காணித்து வருகிறது.

இவ்வகை பிளேக் நோய்கள் சீனாவில் பல ஆண்டுகளாகவே இருந்திருக்கின்றன. இவ்வகை பிளேக் நோய் ஏற்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவே. சரியான நேரத்தில் சிகிச்சை வழங்காவிட்டால், 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.

சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் புபோனிக் பிளேக்கால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வப்போது நோய் பரவல் தொடங்கும் போது, அரசு தீவிரமாக கட்டுப்படுத்தி வருவதால் இது வரை பெரிய அளவில் பரவல் ஏற்படவில்லை. இருப்பினும் கொரோனா வைரசால் உலகமே பரிதவித்து வரும் நிலையில், சீன அரசு இதை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கையாழுகிறது.

உலக வெப்பமையமாதல், சூழலியல் சீர் கேடுகள் காரணமாக, இனி வரும் காலங்களில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இன்னும் பல வைரஸ்கள் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அண்டார்டிகா, ஆர்டிக் போன்ற உறை பனி பகுதிகளில் பல கோடி ஆண்டுகளாக. ஐஸ் கட்டிகளுக்கு அடியில் தூங்கிக் கொண்டிருக்கும் வைரஸ்கள், புவி வெப்ப மையமாதலால் ஏற்படும் பனிக்கட்டி உருகுதலில் வெளி வரும் வாய்ப்பு உள்ளது. அப்படி வெளிவரும் வைரஸ் கிருமிகள், விலங்குகள் மூலம் கடத்தப்படும். முதலில் விலங்கிடமிருந்து விலங்குகளுக்கு பரவும். பின் விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவும். கொரோனா ஒரு சாம்பிள் மட்டும் தான். முழு வீச்சில் சூழலியல் சீர்கேடுகளை தடுக்காவிடில், இன்னும் இந்த உலகம் பேராபத்துகளை சந்திக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Also Read: உஷார்!!! “கொரோனா பெயரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் புதிய வைரஸ்” - சி.பி.ஐ எச்சரிக்கை!