உலகம்

#Corona : “2 மாதங்களுக்குப் பிறகு தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்” - சுதந்திரமாக வெளியே நடமாடும் சீன மக்கள்!

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்த பாதிப்பைத் தடுக்க இயலாமல் உலக நாடுகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

கொரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை முயற்சிகளை சீனா, கியூபா போன்ற நாடுகள் செய்துவருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் தவிர வேறு உறுதியான திட்டமின்றி அனைத்து நாடுகளும் விழிபிதுங்கி உள்ளன. இதனால், பரவுதலைக் கட்டுப்படுத்தும் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தல் என ஐ.நா அறிவித்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், உலக நாடுகள் முழுவதும் பரவும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா தற்போது மீளத் துவங்கியுள்ளது. சீன அரசால் 2 வாரங்களில் கட்டப்பட்ட மருத்துவனை, நாட்டில் அனைத்துப் பகுதியில் இருந்தும் பணியாற்றிய மருத்துவத் துறை ஊழியர்களைக் கொண்டுவந்து ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது; ஒரு மாகாணத்தையே வைக்கும் LOCK DOWN ஆகிய முறைகளின் மூலம் தற்போது பாதிப்பைக் கட்டுப்படுத்தியுள்ளது சீனா.

மருத்துவத் துறையின் முழு ஒத்துழைப்பும், அரசின் அதிதீவிர முயற்சியினாலும் உயிரிழப்பு கட்டுப்படுத்தபட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவுதலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இது உலக மக்களை ஆச்சிரியப்படுத்திய நிலையில் தற்போது புதிய தகவலை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பில் இருந்து சீனா முழுவதும் மீண்டுவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் சீனாவில் உள்ள மாகாண எல்லைகள் மட்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் கட்டுப்பாடு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களை விடுவித்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்த மக்கள் கட்டுப்பாடு தளர்வுக்குப் பிறகு வெளியே வரத்துவங்கியுள்ளனர். சாலைகளில் உற்சாகமாக நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

மேலும், வழிபாட்டுத்தலங்கள், கடைகள், உணவங்கள், இறைச்சிக்கடைகள் போன்றவையும் திறக்கப்பட்டுள்ளன. அரசு வாகனங்கள் மட்டும் தற்போது இயக்கப்படுகிறது. தொழிற்சாலைகளை இயக்க அந்நாட்டு அரசு அனுமதிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், சீனாவில் வூஹான் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. மேலும் ஏப்ரல் 8-ம் தேதிவரை லாக்டவுன் கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடு குறித்து உண்மை நிலவரங்களை சீனா அரசு மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.

சீனா மக்கள் சிலர் உலக நாடுகளில் பரவி வரும் வைரஸ் பாதிப்பிற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் நிச்சயம் மக்கள் மீண்டு வருவார்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர். சீனாவின் இயல்பு நிலை உலக மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. சீன மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் துவங்கியுள்ளனர்.

Also Read: அன்று ‘கொரோனாவால் போனால்தான் உயிரா..?’ இன்று ‘கொரோனா அச்சம்’ - ‘அந்நியன்’ போல மாறிய ரங்கராஜ் பாண்டே!