உலகம்

ஒட்டுமொத்த இத்தாலியும் கதறிய நேரத்தில் கொரோனா வைரஸை தோற்கடித்த ஒரே நகரம்! #CoronaAlert

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 3 லட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் இத்தாலி மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 6,077 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 63,927 பேர் பாதிக்கப்பட்டுளனர். இத்தாலி மருத்துவர்கள் இரவு பகலாக COVID-19 எனும் கொரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொரோனாவால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ள இத்தாலிக்கு உதவும் வகையில் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கியூபா, அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, இத்தாலி நாட்டின் வோ நகரம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தோற்கடித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்த இத்தாலியும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள வோ நகரம் மற்ற நகரங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி இத்தாலியின் வோ நகரம், இத்தாலி சுகாதாரத் துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வோ நகருக்குள் யாரும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதி மறுக்கப்பட்டனர். மேலும் நகரில் உள்ள அனைவரும் சோதனை செய்யப்பட்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களுக்குக் கூட சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 14 நாட்களுக்குப் பின்னர் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாத சாதனையை வோ நகரம் புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் வோ நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனாவால் அச்சுறுத்தலைச் சந்தித்து வரும் அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read: நாட்டு மக்களுக்கு தலைநகர் அளித்திருக்கும் நம்பிக்கை.. 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!