உலகம்

“வடகொரியாவில் மட்டும் கொரோனா வந்தால் அவ்வளவுதான்” : அதிகாரிகளை மிரட்டிய கிம் ஜாங் உன்!

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் (கோவிட் - 19) சுமார் 60 நாடுகளுக்கு ப்பரவி உலக மக்களையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த் தொற்றால் சீனாவில் மட்டும் இதுவரை 2,835 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரத்துக்கும் மேலானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சீனாவுக்கு அருகாமையில் உள்ள வடகொரிய நாட்டில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக, அதுகுறித்து அறிந்த உடனேயே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது அந்நாட்டு அரசு. முதல் ஆளாக நாட்டின் அனைத்து போக்குவரத்துக்கான கதவுகளையும் அடைத்து உத்தரவிட்டார் அதிபர் கிம் ஜாங் உன்.

ஆனால், வடகொரியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் வராமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக எவ்வித பாதிப்பும் வடகொரியாவில் ஏற்பட்டு விடக்கூடாது என தனது அதிகாரிகளையும் எச்சரித்துள்ளார் கிம்.

கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி நாட்டுக்குள் கொரோனா பாதிப்பு வந்துவிட்டால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகையால் எந்த நிலையிலும் உஷாராக இருக்கவேண்டும் இல்லையெனில் கடுமையான தண்டனைகளுக்கு அதிகாரிகள் ஆளாக நேரிடும் என கிம்ஜாங் உன் கூறியிருக்கிறார் என அந்நாட்டு KCNA செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட வர்த்தக அதிகாரி ஒருவரை பொதுவெளியில் உலாவவிடாமல் தவிர்த்த போலிஸார் அவரை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், வடகொரியாவில் மருத்துவ வசதி போதிய அளவுக்கு இல்லாததாலேயே இந்தக் கட்டுப்பாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சீனாவுக்கும், தென்கொரியாவுக்கும் மத்தியில் வடகொரியாவுக்கு மட்டும் கொரோனா பரவாமல் இருப்பது எப்படி சாத்தியமாகும் என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: “ஈரானையும் விட்டு வைக்காத கொரோனா”: துணை அதிபர், சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட 245 பேருக்கு வைரஸ் பாதிப்பு!