உலகம்

சீனாவை அடுத்து ஜப்பானை துரத்தும் கொரோனா வைரஸ் : ஒலிம்பிக் 2020 ரத்தாக வாய்ப்பு?

சீனாவின் வூஹான் நகரில் தொற்றத் தொடங்கிய கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தென்கொரியா, ஜப்பான், ஈரான், ஈராக், இஸ்ரேல் என உலகின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இரண்டாயிரத்து 712 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்ட போதும் இதற்கான உரிய மருந்துகள் கண்டுபிடிக்கபடாமல் இருப்பது மக்களிடையே மேன்மேலும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கோவிட்-19 ஜப்பானையும் விட்டுவைக்காத காரணத்தால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த அதிகாரி ஒருவர், ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. ஆனால், மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்வது குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Also Read: “தொடர்பு இல்லாத நாடுகளுக்கும் பரவும் கொரோனா” வெகுவாக தீவிரமடைவதற்குள் தடுக்கவேண்டும்- எச்சரிக்கும் ஐ.நா!