உலகம்

“ஒரே நாளில் 242 பேர் பலி - 1,350 ஆக அதிகரித்த உயிரிழப்புகள்” : சீனாவை மிரட்டும் கொரோனா - அதிர்ச்சி தகவல்!

சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 1,350 பேர் பலியாகியுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால், சீனாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த லீ வெண்லியாங் என்ற மருத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சீனாவில் கடந்த 8-ம் தேதி வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர் எண்ணிக்கை 723 ஆக அதிகரித்த நிலையில் கடந்த 9-ம் தேதி 81 பேர் உயிரிழந்து பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சீனாவின் ஹூபே நகரில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 1,350-ஐ கடந்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 44,200க்கும் அதிகமானோருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: கொரோனா எதிரொலி : சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை - மத்திய அரசு அறிவிப்பு!