உலகம்

#FACTCHECK கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20,000 பேரை கருணை கொலை செய்ய சீன அரசு திட்டமா? உண்மை என்ன?

சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரையில் இந்த நோய் தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 803-ஐ தொட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பல்லாயிரணக்கானோருக்கு சீன அரசு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதித்து வருகின்றன. மேலும், சீனாவுக்கு செல்லும், அங்கிருந்து வரும் கடல் மற்றும் வான் வழி போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல்வேறு நாட்டு வைத்தியங்களை பரிந்துரைத்து சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பலி எண்ணிக்கையை குறைக்க சுமார் 20,000 பேரை கருணை கொலை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்காக நீதிமன்றத்தை நாடிய சீன அரசுக்கு அனுமதியும் கிடைத்துவிட்டதாகவும் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் சீனாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்த இணையதளத்தை தவிர வேறு எந்த செய்தி தொலைக்காட்சியும் இந்த தகவலை ஒளிபரப்பவோ, பதிவிடவோ இல்லை. இந்த செய்தி அண்மைக்காலங்களாக கொரோனா வைரஸை விட வேகமாக பரவுவதோடு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சீன அரசு கருணை கொலை செய்யவுள்ளதாக பரவிய செய்தி அப்பட்டமான பொய் என ஊடகங்கள் உண்மை தகவலை ஆராய்ந்து வெளியிட்டுள்ளன. இதேபோல, சீனாவுக்கே செல்லாத சிங்கப்பூரைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் அதே செய்தி நிறுவனம் பதிவிட்டிருக்கிறது. இதனை பொய் என உறுதி செய்த சிங்கப்பூர் அரசாங்கம், அந்த செய்தியை யாரும் நம்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Also Read: கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கூறி விமானத்தை தரையிறக்கிய இளைஞர் : விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!