உலகம்
பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் : ஈரான் ராணுவத் தளபதி படுகொலை - பதட்டம்!
ஈராக்கில் கடந்த வாரம் ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராடிய அவர்கள், தூதரகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்துச் சிதறின. விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன.
இந்தத் தாக்குதலில், ஈரானிய புரட்சிப் பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின் அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார். வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. தேசியக்கொடியை பதிவிட்ட 2 மணி நேரத்திற்குள் 1.8 லட்சத்துக்கும் அதிகமானோர் அதனை லைக் செய்துள்ளனர். 47 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்தனர்.
ஈராக்கில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டிருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கர்களை தாக்கத் திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்த படுகொலை சம்பவத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், ஈராக் மக்கள் இதனை வரவேற்று நடனம் ஆடுவது போன்று வீடியோக்களும் இணையத்தில் வலம் வருகின்றன.
ஈரான் நாட்டு இராணுவத் தளபதி படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மூன்றாம் உலகப்போர் மூளுவதற்கான சூழல்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!