உலகம்
ஆஸ்திரேலியாவில் 3 மாதங்களாகத் தொடர்ந்து வரும் காட்டுத்தீ : பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
ஆஸ்திரேலியாவில் கடுமையான வெப்பநிலை மாற்றத்தாலும், அனல் காற்றாலும் அந்நாட்டில் மூன்று மாதங்களுக்கும் மேலாக காட்டுத்தீ ஏற்பட்டு பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் காட்டுத்தீயால் மனிதர்களோடு சேர்ந்து விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
30 டிகிரி செல்சியஸுக்கும் மேலாக வெப்ப அலை வீசும் வேளையிலும் காட்டூத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த காட்டுத்தீயால் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி, விக்டோரியா உள்ளிட்ட பல மாகாணங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் ஏற்கெனவே 10 பேர் பலியாகியுள்ள நிலையில் நேற்று 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணிலடங்காத வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இது ஒருபுறமிருக்க, கோலாக்கரடிகள், கங்காரு போன்ற ஆஸ்திரேலியாவின் சிறப்புவாய்ந்த விலங்குகளும் இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான கோலாக் கரடிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும், அவற்றின் எண்ணிக்கைகளை காட்டுத்தீ அடங்கிய பின்னரே கணக்கிட முடியும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுத்திருப்பதோடு, காட்டுத்தீ பரவி வரும் ஏராளமான சாலைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் அவதியுற்று வருகின்றனர். மேலும், விக்டோரியா மாகாணத்தில் உள்ள மக்கள் காட்டுத்தீயின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடற்கரையை நோக்கிப் பயணிக்க தொடங்கி இருக்கின்றனர்.
இதற்கிடையே, ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மக்களை இடம்பெயர வைக்க ஆஸ்திரேலிய அரசு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயத்தில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றது. ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை அதிகரித்திருப்பதற்கு இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றமே காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”
-
பொய்யை மட்டுமே பரப்பும் த.வெ.க! : ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu ஊடகம்!
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!