உலகம்
உலகின் முதல் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா? - World Photography Day ஒரு வரலாற்று பார்வை!
நாம் வாழும் தருணத்தை நமக்கு முப்பொழுதும் நினைவூட்டுபவை புகைப்படங்கள். வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும், துயரமான பொழுதுகளையும் மறக்கமுடியாத சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டு வரும் புகைப்படங்கள் காலத்தின் பொக்கிஷங்கள்.
ஒருசில புகைப்படங்கள் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை. தெற்கு வியட்னாமில் 1972 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தமொன்றில் நடந்த Napalm எனும் எரி குண்டுத் தாக்குதலில் இருந்து தப்பித்து பயந்தோடி வருகிறாள் ஒன்பது வயதுடைய கிம் போஹ் என்ற சிறுமியின் புகைப்படம் உலகத்தின் சிறந்த புகைப்படமாக இன்றளவும் உள்ளது.
மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதமாக புகைப்படங்கள் மானுட வாழ்வியலை வெளிச்சம் போட்டுக்காட்டுவதில் இருந்து மனிதனின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம். அரசியலில் நாகரீகம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை எக்காலத்திலும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள நாகரீக அரசியல் நடந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமக்கு உதவுகின்றன.
கடந்து போன வாழ்வின் நினைவுகளை மீட்டெடுக்கும் யாழ் இசையாக புகைப்பட ஆல்பங்களை காணும் நம் கண்கள் ஒரு சொட்டு கண்ணீரையாவது சிந்தும். இத்தகைய வல்லமைபடைத்த புகைப்படக் கலையின் தோற்றுவாய் 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுது. அதிலும், இன்று 180 வது ஆண்டு புகைப்பட தினமாகும்.
அப்ஸ்குரா என்ற பெயரில் புகைப்படம் எடுக்க கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 1825-ம் வருடம் பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த ஜோசப் நீப்ஸ் என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவியில் படம் எடுத்தார். ஆனால், அந்த பிம்பம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்துவிட்டது.
இதன்பிறகு 1839-ம் ஆண்டு சர் ஜான் ஹெர்செல் என்பவர் கண்ணாடியை பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். அவர்தான், இக்கலைக்கு போட்டோகிராபி என்று பெயர் வைத்தார். போட்டோ கிராபி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ‘ஒளியின் எழுத்து’ என்று பெயர்.
இதனைத் தொடர்ந்து இதே ஆண்டில், லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பங்கள் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். மரத்தாலான இந்த புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு ‘டாகுரியோடைப்’ என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது.
இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயல் பாடுகளை 1839-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி ‘ப்ரீ டூ தி வேர்ல்ட்’ என உலகம் முழுவதும் அறிவித்தது. அந்த நாளே வருடந்தோறும் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து புதிய முறையிலான கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1841-ல் பிரிட்டனை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பாக்ஸ் என்பவர் கலோடைப் என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதில் நெகட்டிவ்களாக பேப்பர்கள் பயன்படுத்தப்பட்டன. அதிலிருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது. 1851-ல் பிரெடிரிக் ஸ்காட் என்பவர் சில்வர் நைட்ரேட் பயன் படுத்தப்பட்ட வெட் கோலோடியன் செயல் முறையை கண்டறிந்தார். 1880-களில் செல்லுலாய்ட் பிலிம்களை பயன்படுத்தி புகைப் படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட், ஹன்னிபால் குட்வின், ஈஸ்ட்மேன் கோடாக் ஆகியோர் தயாரித்தனர் இந்த முறையில் செல்லுலாஸ் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது.
1888-ம் ஆண்டு ‘ஜார்ஜ் ஈஸ்ட்மேன்’ முதல் முறையாக பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை கண்டறிந்தார். அதைத்தொடர்ந்து 1900-ல் பாக்ஸ் பிரவுனி என்ற வகை கேமராக்களை கோடாக் அறிமுகப்படுத்தினார். 35 மி.மி. ஸ்டில் கேமராக்களை 1913-ல் ஆஸ்கர் பர்னாக் வடிவமைத்தார். இது புகைப்படத் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. உலகெங்கும் ப்லிம் ரோல் தயாரிக்கும் தொழில் வெகு சிறப்பாக தொடங்கி நடத்தப்பட்டு வந்தது.
கடந்த 1981 ஆம் ஆண்டு பிக்சல் முறையில் புகைப்படங்களை உருவாக்கும் டிஜிட்டல் கேமராவை சோனி நிறுவனம் தயாரித்தது. இது புகைப்பட கலையின் வேறு பரிமாணத்திற்கு உதவியது. இதனைத் தொடர்ந்து செல்போன்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன்விளைவு நொடிக்கு நொடி போட்டோக்கள் எடுத்துத் தள்ளப்படுகின்றன.
ஒரு காலகட்டத்தில் புகைப்படங்கள் எடுப்பது ஆயுளை குறைக்கும் என்ற மூட நம்பிக்கை இருந்தது. தற்போது இந்த மூட நம்பிக்கை தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. ‘செல்பி’ எடுக்காத நபர்களை உலகத்தில் காட்டவே முடியாது.
இந்த டிஜிட்டல் யுகத்தில், புகைப்படக் கலையை வளர்ப்பதற்காக புகைப்பட தொழிற் நுணுக்கங்களை கற்றுத் தரும் புகைப்பட தொழில் குறித்த புத்தகங்களும், இதழ்களும் நிறையவே வெளியாகின்றன.
இதன் நீட்சியாகத் தான் உலகெங்கிலும் புகைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை, தெருக்கள், நாடுகள், விலங்குகள், மனிதர்கள் என பல்வேறு தலைப்புகளிலும் புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் புகைப்படக் கலை அனைத்துதரப்பு மக்களிடமும் விருப்பமான கலையாக மாறிவிட்டது.
Word Press நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த புகைப்படமாக ஹங்கேரி-சேர்பியா எல்லையில் முட்கம்பி வேலிகளுக்கு இடையே ஒரு புறமிருந்து மறுபுறத்திற்கு அகதிகளால் கைமாற்றப்படும் கைக்குழந்தையை படம்பிடித்த புகைப்படம் தெரிவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய புகைப்படக் காரர் Warren Richardson என்பவரால் எடுக்கப்பட்ட இப்புகைப்படம், மிகச் சக்திவாய்ந்த காட்சியமைப்பையும் அதே நேரம் மிக நுட்பமாக தீட்டப்பட்ட புகைப்படமாகவும் காணப்படுவதாக நடுவர் குழுவினர் அறிவித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த புகைப்பட போட்டியில் பங்குபெற்ற 82,951 புகைப்படங்களில் இந்த புகைப்படம் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.
இதே ஆண்டு சிரிய அரசுக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த போரில் பல கோடிக்கணக்கான சிரிய மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். உலக நாடுகள் சிரிய அகதிகளை ஏற்றுகொள்ள தயங்கியது. பல கோடி மக்கள் கடல் வழியே பக்கத்து நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது , கடல் தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. இந்த புகைப்படம் உலகை ஒரு உலுக்கு உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு நடந்த உலக ஊடக புகைப்பட போட்டியில் இயற்கை சார்ந்த பிரிவில் யானையை நேசிக்கும் மனிதம் என்ற புகைப்படம் முதல் பரிசு பெற்றது. கென்யாவிலுள்ள யானைகள் சரணாலயத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
பத்திரிகைகள் தத்தமது பத்திரிகைகளில் வெளியிடும் புகைப்படங்களுக்கு வாசகர்கள் முக்கிய இடம் கொடுக்கின்றன. இவ்வாறாக பத்திரிகைகளில் பிரசுரமாகும் புகைப்படங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புகைப்படக் கலை தொழிலாக மாறியதற்குப் பிறகு கல்யாண வீடுகளில் புகைப்படம் எடுப்பதே ஒரு கொண்டாட்டமாக மாறிவிட்டது. மணமக்களை விதவிதமாக சுட்டுத்தள்ளி வகைவகையான ஆல்பங்கள் தயாராகின்றன. இத்தகைய திருமண புகைப்படங்களில் சிறந்தது எது என்கிற விருதும் வழங்கப்படுகிறது. வெட்டிசன் அவார்டு என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருது தொழில்முறை புகைப்படக் கலைஞர்களை சிறப்பிக்கிறது. புகைப்படக் கலை வல்லுநர்களாக இல்லாதவர்களும் கூட தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை பல்வேறு போட்டிகளுக்கு அனுப்பி பரிசுகள் பெறலாம் என்ற சூழலும் தற்போது உள்ளது. பல்வேறு சேனல்களும், உலகம் தழுவிய அமைப்புகளும் இவ்வகை போட்டிகளை நடத்தி வருகின்றன. அமெச்சூர் வகை புகைப்பட கலைஞர்களும் தற்போது அசத்தி வருகின்றனர்.
கல்லூரிகளில், மக்கள் தொடர்புக் கலை பயிலும் மாணவர்களுக்கு புகைப்படக் கலை ஒரு பாடமாகவே எடுக்கப்படுகிறது. இதுதவிர புகைப்படக் கலையில் பட்டயமும் வழங்கப்பட்டு வருகிறது.
புகைப்படக் கலை, கலையாக மட்டுமல்லாமல் தொழிலாகவும் மாறி இருந்தாலும் புகைப்படங்கள் நம் இதயத்திற்கு நெருக்கமானவை என்பது எப்போதும் உண்மையே. நம் மனதிற்கு இதமாகவும், நம் கற்பனைத்திறனை வளர்க்கும் ஆயுதமாகவும், நினைவுகளை திரும்ப நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் புகைப்படக்கலை என்பது ஓர் அற்புத கலை என்றால் அதுமிகையாகாது.
இன்று உலகப் புகைப்பட தினம். கேமரா கண்கொண்டு நம் நினைவுகளை பதிய வைப்போம். வாங்க... ‘ஒரு போட்டோ எடுக்கலாமா சார்?’
Also Read
-
“நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” - தீஸ்தா செதல்வாட் புகழாரம்!
-
துப்பாக்கிச் சூடு விவகாரம் : பேட்டியளித்த வழக்கறிஞர்... நோட்டீஸ் அனுப்பிய சல்மான் கான்.. நடந்தது என்ன ?
-
லஞ்சம் பெறுவதாக தகவல்... புதுவை அரசு அதிகாரியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை - நடந்தது?
-
”ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டம் நிறைவேறாது” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!
-
காலையில் ஜாமீன்.. மீண்டும் கைது.. தொடர் சிக்கலில் பாஜக MLA: பெண் அளித்த பாலியல் புகாரால் அதிரடி -பின்னணி?