உலகம்

“ஆண்களின் அனுமதி தேவையில்லை, சவுதி பெண்கள் இனி தனியாக வெளிநாடு செல்லலாம்!”- சவுதி மன்னர் அதிரடி உத்தரவு!

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. இதனால் பல விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில் சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக மன்னர் சல்மானின் இளைய மகன் முகமது பின் சல்மான் சமீபத்தில் பொறுப்பேற்றார்.

இவர் பொறுப்பேற்ற நாள் முதல் அரசின் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பல புதிய திட்டங்களையும், நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது, விண்வெளித் திட்டம் - கேளிக்கை விடுதிகளுக்குப் பெண்கள் அனுமதி எனப் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 21 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும், ஆண்களின் அனுமதியின்றி விண்ணப்பம் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அந்நாட்டின் அரசு நாளிதழில் வெளிவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதி பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். அதன் வெளிப்பாடாக பெண்களின் நிலைமையை உணர்ந்து இந்த நடவடிக்கையை மன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டுப் பெண்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் ஆதரவளித்து நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், உலக நாடுகளில் உள்ள பல பெண்கள் அமைப்பும் இந்த அறிவிப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.