உலகம்

சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் 220 கோடி பேர் பரிதவிப்பு : ஐ.நா சொல்லும் அதிர்ச்சி தகவல்!

இந்தியா மற்றும் தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. மேலும் நாட்டில் உள்ள பல ஆறு குளங்கள் என அனைத்தும் வறண்டு போய் உள்ளது. குடிநீர் விநியோகிப்பதில் அரசு இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் சுகாதாரமான குடிநீர் பற்றி ஐ.நா ஆய்வு மேற்கொண்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து அந்த ஆய்வில் கணக்கெடுப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதி இல்லாமல் தவிப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வறிக்கை தொடர்பாக யூனிசெஃப் அமைப்பின் குடிநீர் மற்றும் சுகாதார பிரிவின் இயக்குனர் கெல்லி ஆன் கூறியதாவது, "குழந்தைகளுக்கு அத்தியாவசியமாக இருக்கும் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை உலக நாடுகள் அனைத்தும் ஏற்படுத்தி தர வேண்டும். தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தல், சுகாதாரமான கழிவு நீர்கால்வாய்கள் ஆகியவற்றை அமைப்பது, அரசுகளின் முக்கிய திட்டமாக இருக்க வேண்டும்” என வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக மார்ச் மாதம் 23ம் தேதி உலக தண்ணீர் தினத்தை கடைபிடித்தது ஐ.நா. அப்போது தண்ணீர் தொடர்பாக மற்றொரு அதிர்ச்சி தகவலை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், " உலக மக்கள் தொகையில் 3ல் ஒரு பங்கு மக்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்.

சுகாதாரமான குடிநீர் கிடைக்காதவர்களில் 80% சதவீதத்தினர் கிராமப்பகுதிகளில் வசித்துவருகின்றனர். இதே நிலை நீடித்தால் 2030ம் ஆண்டிற்குள் குடிநீர் தட்டுப்பாட்டினால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை 70 கோடி ஆக இருக்கும்." என ஐ.நா சபை கணித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட 2,97,000 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதற்கு சுகாதாரமற்ற தண்ணீர் பயன்பாடு முக்கிய காரணம் என்கிறது ஐ.நா .