Viral

“வித்தியாசமான குணாதிசயங்கள்.. வீடுகளை இடித்து அரிசி சாப்பிட்டும் காட்டுயானை” : யார் இந்த அரிசி ராஜா ?

கூடலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட வீடுகளை இரவு நேரங்களில் புகுந்து வீடுகளை இடித்து அரிசி சாப்பிட்டு செல்லும் PM2 எனப்படும் தந்தமில்லாத ஆண்யானை ,

வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட இந்த யானையைப் பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலத்தையும் ஒன்றிணைக்கும் மாவட்டமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய மூன்று மாநில வனப்பகுதி ஒன்றோடு ஒன்று இணைந்த வனப்பகுதியாக உள்ளது.

இந்த மூன்று மாநில வனப்பகுதியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. கேரளாவில் இருந்து உணவு தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டத்திற்குள் உள்ள வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து வரும் யானைகள், நீலகிரி வனப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் சென்று தனது வாழ்நாளை மூன்று மாநில வனப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறது.

இவ்வாறு யானைகள் பெருமளவு யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் தனது வலசுப் பாதையில் சென்றாலும் ஒரு சில யானைகள் தனது குணாதிசயங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகிறது. அதன்படி கேரளாவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து வந்த மக்னா எனப்படும் இரண்டு தந்தம் இல்லாத ஆண்காட்டு யானைகள் கூடலூர் பகுதிக்கு வந்தது. இந்த யானைகள் இரண்டு ஆண்டு காலமாக கூடலூர் வன கூட்டத்திற்குட்பட்ட கூடலூர், தேவாலா, சேரம்பாடி ஆகிய மூன்று வனச்சரகம் பகுதிகளில் மட்டுமே நடமாடி வருகிறது.

அவ்வாறு இரண்டு ஆண்டுகளாக வேறு எந்த பகுதிக்கும் செல்லாமல் இந்த மூன்று வாசகத்துக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே வசிக்கும் இந்த இரண்டு தந்தம் இல்லாத மக்ன யானைகளுக்கு கூடலூர் வனத்துறையினர் PM1, PM2 என பெயர் சூட்டி கண்காணித்து வந்தனர்.

அப்போது இந்த இரு தந்தம் இல்லாத ஆண் யானைகள் நண்பர்களாக, ஒருபோதும் பிரியாமல் இரண்டும் எங்கு சென்றாலும் ஒன்றோடு ஒன்று விளையாடி நண்பர்களாக வளம் வரும் நிலையில், PM2 எனப்படும் மக்னயானை தனது உணவு பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் இரவு நேரங்களில் எங்கெல்லாம் ரேஷன் கடைகள் உள்ளதோ அங்கு சென்று கடைகளை உடைத்து அரிசியை மட்டும் சாப்பிட துவங்கியது.

அதன் பின் கூடலூர், தேவாலா, சேரம்பாடி ஆகிய பகுதிகளில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் இந்த யானை பகல் நேரங்களில் தனது நண்பன் யானையுடன் வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பதுங்கி இருப்பதும் இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை இடித்து அரிசிகளை எடுத்து சாப்பிட்டு வருகிறது.

வனத்துறையினரின் கணக்குப்படி இரண்டு ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து, உடைத்து அரிசி சாப்பிட்டு செல்லும் இந்த யானைக்கு கூடலூர் பகுதி மக்கள் அரிசி ராஜா என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானையை இரண்டு ஆண்டுகளாக வனத்துறையினர் தனி குழு அமைத்து கும்கி யானைகள் உதவியுடன் பலமுறை கிராமப் பகுதியில் நுழைவதை தடுத்து விரட்டியும், இந்த யானை மீண்டும் மீண்டும் கிராமப் பகுதிக்குள் வந்து வீடுகளை இடித்து அரிசியை மட்டும் சாப்பிட்டு செல்கிறது.

எனவே வித்தியாசமான குணத்தை கொண்ட அரிசியை மட்டுமே சாப்பிட்டு மக்களுக்கு இடையூறு செய்யும் இந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்து, தற்போது கால்நடை மருத்துவர்கள், 20க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள், 15க்கும் மேற்பட்ட யானை விரட்டும் குழுவினர், 15. வனத்துறையினர் என 50க்கும் மேற்பட்டோர் அரிசிகளை சாப்பிட்டு உலாவரும் அரிசி ராஜா எனப்படும் PM2 மக்னா யானையை பிடிக்க முயற்சியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இரண்டு நண்பர்களான அரிசி ராஜா எனப்படும் PM2 மற்றும் மற்றொரு மக்னா யானையான Pm1 எனப்படும் யானையும் தற்போது ஒன்றாக சுற்றி வருவதால் வனத்துறையினர் கண்காணித்து இரண்டையும் தனித்தனியாக பிரித்து அரிசி ராஜா எனப்படும் பிஎம் 2 என்ற யானையை பிடிக்கும் பணியை புதிய யூகங்கள் வகுத்து பழங்குடியினர் உதவியுடன் இந்த யானை விரைவில் பிடிக்கப்படும்.

Also Read: 3 நாட்களுக்கு பின் தாயுடன் இணைந்த குட்டி யானை... வனத்துறையின் உதவியோடு முடிவுக்கு வந்த பாச போராட்டம் !