Viral

3 நாட்களுக்கு பின் தாயுடன் இணைந்த குட்டி யானை... வனத்துறையின் உதவியோடு முடிவுக்கு வந்த பாச போராட்டம் !

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால் மாவனல்லா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குட்டி யானை ஒன்று அடித்து வரப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வேட்டை தடுப்பு காவலர்களுடன் ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானையை பத்திரமாக மீட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக வனத்துறையினர் தாயின்றி தவித்து வந்த குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக எட்டு குழுக்களாக பிரிந்து மாவனல்ல, வாழைத்தோட்டம், ஆனைகட்டி, சிங்கார உள்ளிட்ட வனப்பகுதிகளில் தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு சீகூர் வனப்பகுதியில் தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது பூபதிப்பட்டி மற்றும் காங்கிரஸ் மட்டும் ஆகிய பகுதிகளில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதையும், கூட்டத்தின் அருகே பெண் யானை ஒன்று தனியாக இருப்பதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக குட்டியானையை பெண் யானையான சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஆண் யானை வனத்துறையினரை விரட்ட முயன்ற போது இதனை அறிந்த வனத்துறையினர் குட்டியை விட்டு அப்பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறினர். பின்னர் தாய் யானை குட்டி யானையை அழைத்துச் சென்று அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று மறைந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நள்ளிரவு குட்டி யானை தாயுடன் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று குட்டி யானை தாயுடன் இருப்பதை உறுதி செய்ய வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்காக சீகூர் வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்த போது தாய் யானை அதனுடன் மற்ற பெண் யானை இரண்டும் சேர்ந்து அந்த குட்டியை அரவணைத்து அழைத்துச் சென்று காட்சி பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்.. INSTA பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!