Viral
ஒரு சமூகத்தில் மொழியின் தேவை என்ன?.. அதன் பங்கு என்னவாக இருக்கும்?
ஒரு சமூகத்தில் மொழியின் தேவை என்ன?..
மொழியை வெறும் தொடர்புக்கான கருவி என மட்டும் சுருக்கி சொல்லும் போக்கு ஒன்று உண்டு. மறுபக்கத்தில் மொழி என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை பண்பாட்டுக் கூறு என சொல்லும் போக்கும் இருக்கிறது. இதில் எது சரி?
இதற்கு முன் மொழியை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
மொழி என்பதே தொழில்நுட்பம்தான். மனித வரலாற்றை, தத்துவங்களை தொகுக்கும் தொழில்நுட்பம். சக மனிதனிடம் பேசுவதில் இருந்து கடந்த தலைமுறை, கடந்த யுகம், எதிர்காலம் என எட்டுத்திக்குகளுக்கும் பயணிக்கக் கூடிய தொழில்நுட்பம்.
தொழில்நுட்பம் என்றாலும் மிகப் பழைய தொழில்நுட்பம்தானே? பழையதைக் காக்க வேண்டிய அவசியமில்லையே!
மொழியின் சிறப்பே அது பழையதாக முடியாதென்பதுதான். சாமானியன் பேசும் வரை மொழி நீடிக்கும். நீடிக்கும் வரை மொழி நவீனமாகவே இருக்கும். நவீனம் எனப்படுவதும் ஒரு வகை மொழியே.
மொழியின் வளர்ச்சியில் மற்றொரு மொழியின் பங்கு என்னவாக இருக்கும்?
அடுத்த மொழியின் அளாவலை அனுமதிக்கும் அதே நேரத்தில் தன் அடையாளத்தை இழக்காமல் இருக்கும் மொழிதான் வளரக் கூடிய மொழி. அடையாளம் என்பதை தொன்மமாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு மொழி அடைகாக்கும் வாழ்வியல், பண்பாடு, இலக்கியம், கலை என புரிந்துகொள்ளுங்கள்.
மற்றொரு மொழியின் அளவளாவலை அனுமதித்தும் தன்னை இழக்காத இலக்கண இலக்கியங்களையும் கலை ஆசார தொன்மங்களையும் இலகுதன்மையும் கொண்டிருக்கும் மொழிக்கு நவீனம் என்பது அடிப்படை இயல்பாகவே இருக்கும். எல்லா காலங்களிலும் நவீனமாக இருப்பதால்தான் அந்த மொழி தழைத்து வளர்ந்திருக்க முடியும்.
நவீன தொழில்நுட்பத்தின் வீச்சு உலக முழுமைக்கும் ஒன்றாக இருப்பதால் பரவலாக்கம் அதன் வழி மிக எளிமை ஆகிறது. எளிமையாய் இயைந்து மேம்படக்கூடிய மொழிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மந்திரக்கம்பளம் தான். செல்லாத தூரங்களுக்கும் அடையாத உயரங்களுக்கும் வெகு எளிதில் சென்றுவிடலாம்.
என்னதான் நவீன தொழில்நுட்பமாக இருந்தாலும் அதோடு இயைந்து செயல்படும் தன்மையற்ற மொழியும், அம்மொழி பேசும் மக்களும், அடுத்த நிலையை கண்டு தழுவும் முற்போக்குத்தனமும் இல்லையெனில் வளர்ச்சி நிச்சயமாய் இருக்காது.
பாண்டித்யம் மட்டுமே கொண்டு சாமானியனை அடைய வில்லை எனில் மொழி அழியும். சாமானியனிடம் மட்டும் புழங்கி ஏடேறவில்லை என்றாலும் மொழி அழியும்.
பல மொழிகள் மிக இளமையானவை. பலவை தன் கட்டுப்பெட்டித்தனத்தாலும் தேங்கிப் போனவை. பல மொழிகள் அழிந்தும் போயிருக்கின்றன. அப்படி அல்லாத மொழிகளுக்கு மட்டுமே நவீன தொழில்நுட்பம் கைகொடுக்கும். ஒருவகையில் தொழில்நுட்பத்தையும் அவ்வகை மொழிகள் விரித்து வளர உதவும். அம்மொழிகளுக்கு சாதல் என்பதே கிடையாது.
அப்படியொரு மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
தமிழ்!
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!