Viral

"இது காரா.. இல்ல கதவா.. Confusion.." - வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ !

மஹிந்திரா குழு இந்தியாவில் வாகனங்கள் உற்பத்தி செய்வதில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக ஆனந்த் மஹிந்திரா பொறுப்பேற்றதில் இருந்தே இந்நிறுவனம் பல வெற்றிகளை கண்டு வருகிறது.

அதோடு இவர் பல வித்தியாசமான கோணங்களில் யாரேனும் முயற்சி மேற்கொண்டால் அதனை அறிந்து பாராட்டியும் வருகிறார். இப்படி கடந்த ஆண்டு மணிப்பூரைச் சேர்ந்த பிரேம் என்ற ஒரு சிறுவன் தனக்குக் கிடைத்த பழைய எலக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு ஒரு கவச உடையை தயாரித்தார். இதனை கண்ட மஹிந்திரா நிறுவனம் சிறுவனின் கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சிறுவன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு தேவையான கல்வி செலவை மஹிந்திரா குழுமம் ஏற்கும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தாண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பழைய உதிரி பாகங்களை கொண்டு வரும் 60,000 ரூபாய் செலவில் ஜீப் ஒன்றினை உருவாக்கியிருந்தார். இந்த ஜீப் உருவாக்கியவரை பாராட்டியதோடு, அவரது ஜீப்பை மஹிந்திரா நிறுவனம் வாங்கியுள்ளது. வாங்கிய அந்த ஜீப்பை அதன் ரிசர்ச் வேலியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு வெகுமதியாக ஜீப்பை உருவாக்கியவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் சுமார் ரூ.9 லட்சமா மதிப்பிலான BOLERO ஜீப் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி புது வித கண்டுபிடிப்புகளை தொடர்ந்து பாராட்டியும், ஊக்குவித்தும் வரும் ஆனந்த் மஹிந்திரா, தற்போது மற்றொருவரின் புது முயற்சியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் நபர் ஒருவர், தனது வீட்டில் நுழைவுவாயில் உள்ள கேட் கதவை கார் கதவாக தயாரித்துள்ளார். அதாவது தனது வீட்டிலுள்ள பெரிய கேட்டை சில பாகங்களை அறுத்து, காரின் கதவுடன் சேர்ந்த ஒரு பகுதியை இணைத்துள்ளார். இப்படி இணைத்ததால் அந்த காரின் டயர், கேட்டை இழுக்கும் டயராக மாறிவிட்டது.

மேலும் அந்த கேட் கார் கதவை இயக்க ஒரு ரிமோட் மூலம் இயக்க முடிகிறது. இதன்மூலம் உள்ளே இருந்து ஒருவர் வெளியே வரும்போது காரினுள் இருந்து கதவை திறந்து வெளியே வருவது போல் இருக்கிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அதனுடன் சில கேள்விகளையும் கேட்டுள்ளார்.

அதாவது, அதில் "1) ஒரு தீவிர கார் பிரியரா? 2) தன் வீட்டிற்குள் யாரும் நுழைவதைத் தடுக்க இப்படி செய்துள்ளாரா? 3) நகைச்சுவை உணர்வுடன் புதுமையாக முயற்சித்துள்ளாரா? 4) மேலே உள்ள அனைத்தும் கொண்டதாலா?" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், இந்த வீடியோவை சுமார் 4.3 லட்சம் பார்த்ததுடன் சுமார் 1400 பேர் இதை ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

Also Read: சிறுமியை கொடூரமாக கொன்ற சிறுத்தை.. ஆடு வைத்து கூண்டோடு பிடித்த வனத்துறை..