Viral

வசூல்ராஜா படத்தில் வரும் பிரகாஷ்ராஜ்போல் சிரித்து கொண்டே இருந்தால் டென்ஷன், Stress வராது?: இது உண்மையா?

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படம் பார்த்திருக்கிறீர்களா?

அதில் பிரகாஷ்ராஜ் laughter exercise செய்வார். காலையில் தினமும் கடற்கரைக்கு சென்று கூட்டமாக சிரிக்கும் உடற்பயிற்சி! அதை வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க நினைப்பவர். அதாவது மருத்துவராக இருக்கும் அவருக்கு வாழ்க்கையில் அதிக ஸ்ட்ரெஸ் இருக்குமாம். எனவே சுலபமாக கோபம் அடையக் கூடிய சுபாவம் கொண்டவர். ஆனால் கோபம் உடலுக்கும் கேடு, பிறருக்கும் கேடு. எனவே என்ன செய்வது? கோபம் வரும் போதெல்லாம் பிரகாஷ்ராஜ் சிரிக்கத் தொடங்கிவிடுவார். பார்ப்போருக்கு பைத்தியக்காரத்தனமாக தெரியும் அவரது சிரிப்பு. கமல் பாத்திரமே கூட ஒரு காட்சியில் ‘என்னய்யா.. லூசு மாதிரி சிரிச்சுக்குன்னு இருக்கே...’ எனக் கேட்பார்.

இத்தகைய பிரகாஷ்ராஜ் பாணிக்கு பாசிட்டிவிட்டி எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

அதாவது வாழ்க்கையில் சந்தோஷத்தை தவிர்த்த எந்த உணர்வுக்கு ஆட்பட்டுவிடக் கூடாது. எல்லாவற்றையும் ரம்மியமாகவும் அழகாகவும் அற்புதமாகவும் மட்டுமே தான் பார்க்க வேண்டும். ஏனாம்? அப்போதுதான் டென்ஷன் வராது, ஸ்ட்ரெஸ் கூடாது, வாழ்க்கை அற்புதமாக இருக்கும், முகத்தில் ஜேசுதாஸ் இருப்பாராம். இது உண்மையா?

வசூல்ராஜா படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் பாத்திரத்தின் இயல்பை அவதானித்துப் பாருங்கள்.

“ஆபரேஷன் செய்றது உங்க அப்பாவுக்காகவே இருந்தாலும் உன் கை நடுங்கக் கூடாது. நடுங்குனா நீ எமோஷனலா இருக்கன்னு அர்த்தம். நம்மள மாதிரி டாக்டர்ஸ பொறுத்தவரைக்கும் நமக்கு முன்னாடி இருக்கறது ஒரு உடல். அவ்வளவுதான். அப்பா, அம்மா, கணவர், மனைவின்னு எந்த உறவும் இல்லாத ஒரு உடல்” என்பது போன்ற ஒரு வசனத்தை அந்த கதாபாத்திரம் பேசும்.

அவ்வளவு உணர்வற்றுப் போய் இருந்து என்ன சாதிக்கப் போகிறோம்?

துயரத்தை அழுது தீர்க்காமல், கோபத்தை கொட்டி தீர்க்காமல், உண்மையை வெளிக்காட்டாமல் பொய்யான உணர்வுகளை கொண்டு வாழ்ந்து என்ன நேர்மையை நம் வாழ்க்கையில் கட்டி எழுப்பி விடப் போகிறோம்?

கோபம் எதிர்மறை உணர்வுதான். அது நம் மனதையும் ரணப்படுத்தும், பிறரின் மனதையும் ரணப்படுத்தும். ஆனால் அதற்கு தீர்வு அந்த உணர்வை மறுப்பதோ மறுதலிப்பதோ அல்ல. ஓர் எதிர்மறை உணர்வு என்பது கத்தி போல. அதைப் பார்த்த பிறகும் திரும்பிக் கொண்டாலும் மனம் அமைதியாக இருக்காது. எப்போது குத்து விழுமோ என பதறிக் கொண்டே இருக்கும். அதற்குப் பதில் அந்தக் கத்தியை எதிர்கொண்டு, கையாண்டு, நம்மையும் காப்பாற்றி, பிறரையும் காப்பாற்றுவதே சரியான வழியாக இருக்க முடியும்.

ஒரு பிரச்சினை என்பது நாயைப் போல. ஓடும்வரை துரத்தி வரும். நின்று எதிர்கொண்டால் ஓடி விடும்.

நின்று எதிர்கொள்வதை விடுத்து ‘பாசிட்டிவிட்டி’ என்கிறப் பெயரில் பொய்யாக சிரித்துக் கொண்டும் செயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டும் இருந்தால் நம் வாழ்க்கை கொள்ளும் தக்கைதன்மையே பெரும் தொல்லையாக மாறி விடும்.

'நெகட்டிவிட்டி’ போக வேண்டுமெனில் அதற்கான சூழல் போக வேண்டும். நாம் விழிப்புணர்வுடன் கையாண்டு களைகையில்தான் அது நடக்கும். விழிப்புணர்வு இல்லாமல் போலி ‘பாசிட்டிவிட்டி’யுடன் இருப்பதும் நெகட்டிவிட்டிதான்!

Also Read: Life is beautiful.. போரிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, தப்பியோடுதல் வீரம் அல்ல!