Viral

“கட்டையால் அடித்து, காலால் எட்டி உதைத்து கொடூர தாக்குதல்” : 5 வயது சிறுவனுக்கு ஆசிரியரால் நேர்ந்த அவலம்!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தனருவா என்ற பகுதியிலுள்ள 'ஜெயா கோச்சிங் கிளாஸ்' என்ற டியூசன் சென்டரில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் இளம் வயது ஆசிரியர் ஒருவர், அங்கு பயின்று வரும் 5 வயது மாணவனை ஒரு பிரம்பை கொண்டு கடுமையாக தாக்குகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆசிரியர் ஒருவர், 5 வயது சிறு மாணவன் ஒருவரை பிரம்பை கொண்டு சரமாரியாக தாக்குகிறார். இதில் அலறி துடிக்கும் அந்த சிறுவனை மீண்டும் கட்டையால் தாக்கிறார். அப்போது அந்த சிறுவன் தடுக்க முயற்சி செய்யும்போது, அவன் கன்னத்தில் அறைந்து குத்துகிறார். இதில் துடிதுடித்து போன அந்த சிறுவன், தன்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இருப்பினும் மீண்டும் மீண்டும் அடித்து, தலைமுடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி குத்துகிறார்.

இந்த காட்சிகளை கண்ட அங்கிருந்த சக மாணவர்கள் பயத்தில் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர். இதையடுத்து தொடர் தாக்குதல் நடத்தியதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சுயநினைவை இழந்த அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பயிற்சி மையத்தின் உரிமையாளர் அமர்கந்த் குமார் கூறுகையில், "ஆசிரியர் சோட்டு உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதால் இவ்வாறு செய்துள்ளார்" என்றார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, சிறுவன் என்றும் பாராமல் காட்டுமிராண்டி போல் தாக்கிய அந்த ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

Also Read: லாக்கரை உடைத்து 8 கிலோ தங்கம் கொள்ளை : தெலங்கானாவில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் !