Viral

“மகாராஷ்டிரா பாடப்புத்தகத்தில் இடப்பெற்ற தமிழ்நாட்டு மாணவி..” : அவர் செய்த சாதனை என்ன தெரியுமா ?

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் K ஜெயலட்சுமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் விண்வெளி சம்மந்தமாக நடத்திய போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட ஜெயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற்கான பயண செலவை அவரே ஏற்க வேண்டும் என்று நாசா நிறுவனம் திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற மாணவிக்கு, பலரும் உதவி செய்தனர். மேலும், அதற்கான முழு தொகையையும் 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன்வந்தது.

அப்போது நன்றி தெரிவித்த அந்த மாணவியிடம், வேறு ஏதாவது உதவி தேவையெனில் கேட்க சொல்லியது அந்த நிறுவனம். உடனே தற்போதைக்கு தனக்கு எந்த தேவையும் இல்லை, தனது ஊர் மக்களில் பல பேர் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதால், வீட்டுக்கொரு தனிநபர் கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

ஊருக்கே கழிப்பறை கேட்ட அந்த மாணவியின் செயலை பாராட்டி, அவரது கோரிக்கையை ஏற்ற அந்த நிறுவனம், சுமார் 126 வீடுகளுக்கு கழிப்பறையை கட்டிக் கொடுத்து உதவி செய்தது. ஜெயலட்சிமியின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த நிலையில், ரெ.சிவா என்பவர் மகாராஷ்டிராவில் உள்ள 7-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் சுமார் 4 பக்கத்தில் ஒரு பாடத்தில் இவரின் செயல்பாடுகள் குறித்து எழுதியுள்ளார். இந்த நிகழ்வு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது பி.ஏ. வரலாறு படித்து வரும் இவர், தன்னை பற்றி மராட்டிய மாநில தமிழ் பாடப் புத்தகத்தில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read: ‘MISS INDIA 2022’ பட்டம் பெற்ற 21 வயது இளம்பெண்.. யார் இந்த சினி ஷெட்டி ?