Viral

“இறப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு தானே இரங்கற்பா எழுதிய கண்ணதாசன்”: பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

“வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசி வரை யாரோ?”

கண்ணதாசன்.. தமிழுக்கு கிடைத்த வரம்... தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் சொத்து. இவர் பாடல்கள் காலத்தால் அழியாதவை. ஒரு மனிதனுடையை வாழ்வின் எல்லா காலத்திற்கும், நிகழ்விற்கும், உணர்விற்கும் இவர் பாடல்களை இயற்றியுள்ளார். பாடல் வரிகளைக் கேட்ட உடனேயே இது கண்ணதாசனுடைய பாடல் என கூறிவிட இயலும். அந்த அளவிற்கு இவர் பாடல்கள் தனித்துவம் மிக்கவை.

சிறுகூடல்பட்டியில் விசாலாட்சி சாத்தப்பனார் தம்பதியருக்கு ஒன்பது பிள்ளைகளுள் ஒருவராகப் பிறந்தார். இவருக்கு முத்தையா என பெயர் சூட்டினர் பெற்றோர். பின்னர் அதே ஊரில் ஏழாயிரம் ரூபாய்க்கு தத்துக்கொடுக்கப்படுகிறார். பின்னாளில் இவர் எழுதிய, “தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை” பாடல் வரிகள் இவரின் தத்து வாழ்வைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இவரால் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. இதனைக் குறித்து கூறுகையில், "பட்டப்படிப்பு படிக்கத்தான் நினைத்திருந்தேன்... ஆனால் எட்டாம் வகுப்பு எட்டத்தான் என் பெற்றோர் இட்டார்.... பின் ஏழ்மையிலே என்னை உலகில் விட்டார்...

கல்வியிலான் வாழ்வு கரைக்காணாத் தோணியெனக் கலங்கினேன்.. காற்றோரைக் கண்டு கரையில் நின்றேன் " எனக் குறிப்பிடுகிறார்.

எட்டாம் வகுப்பு முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தடைந்தார். ஆனால் இவர் எதிர்பார்த்ததைப் போல சென்னை வாழ்வு அவ்வளவு எளிதானதாக இல்லை. திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து கிடைத்த வேலையை செய்து வந்தவர் பின்னாளில் தென்றல், தென்றல் திரை, கண்ணதாசன் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராகவும் ஆகிறார்.

முத்தையாவாகத் தொடங்கி கண்ணதாசனாக இவரது வளர்ச்சி அபரிவிதமானது. கண்ணதாசன் என்பதற்கு கண்ணனுக்கு தாசன் என்பது பொருள் அல்ல. அழகான கண்களை ரசிப்பதும் அதைப் பற்றி கவிதை எழுதுவதும் என்னுடைய ஆசை.. அதனால்தான் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் என அவர் பெயருக்கு அவரே பெயர் காரணமும் கூறுகிறார்.

எட்டாம் வகுப்பே படித்திருந்தாலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள், இருநூற்று முப்பத்து இரண்டு புத்தகங்கள் கட்டுரைகள் என பல படைப்புக்கு சொந்தக்காரர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். சேரமான் காதலி என்னும் படைப்புக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.

கன்னியின் காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற கலங்காத்திரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே என்ற பாடல் இவருடைய முதல் பாடல். தமிழ் திரையுலகம் கண்ட ஆழமான நட்புக்களில் ஒன்றும் கவியரசர் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய நட்பு.

காலங்களில் அவள் வசந்தம், பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டது, நல்லதொரு குடும்பம், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், தெய்வம் தந்த வீடு.. போன்ற பல எவர் கிரீன் பாடல்கள் தமிழ் திரையிலகிற்கு இவர்கள் அளித்த கொடை.

கண்ணதாசனைப் பற்றி கூறுகையில், கண்ணதாசன் மட்டும் இல்லையென்றால் நான் ஆர்மனியப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு கேரளாவிற்கு பாட்டு வாத்தியராக போயிருப்பேன் என எம்.எஸ்.வி குறிப்பிடுவது அவர்களுடைய ஹிட் காம்போவினுடைய வெற்றியைக் காட்டுகிறது.

மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே இவர் எழுதிய கடைசி பாடல். இவர் பாடகராகவும் நடிக்கிறாகவும் திரைத்துறையில் தன்னை நிரூபித்துள்ளார். இறப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே இவர் தனக்கு இறங்கர்பா எழுதிக் கொண்டவர்.

அதில் ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் அவன் பாட்டு எழுந்து பாடும் என்னும் வரிகள் கவி மேல் அவர் கொண்ட அலப்பரியா காதலை எடுத்துறைக்கிறது. அவ்வரிகளுக்கேற்ப கண்ணதாசன் மறைந்து நாற்பதேழு ஆண்டுகள் ஆகியும் அவர் பாடல்கள் இன்னும் செந்தீயாய் எரிந்துகொண்டே தான் இருக்குறது. ஆம் அப்படிப்பட்ட கவியின் பிறந்தநாள் தான் இன்று.

- சண்முகப்பிரியா செல்வராஜ்

Also Read: “என்னய்யா வேணும் உனக்கு?.. கலைஞர் ரசித்த இளம் இயக்குனர்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு !