Viral

யாராவது இருக்கீங்களா?.. வீட்டு காலிங் பெல் அடித்து அச்சமூட்டிய கரடி.. அதிர்ந்துப்போன குன்னூர் மக்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பகுதியில் கரடி இரவு நேரங்களில் குடியிருப்பு கதவுகளை தட்டும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குன்னூர் அருகே உள்ள ஜெகதளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவு தேடி கரடி, காட்டு எருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் ஜெகதளா பகுதியில் உள்ள கோவிலில் எண்ணெய் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள பழங்களை உண்ணுவதற்காக இரவு நேரங்களில் கரடி ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில் நேற்று (மே 8) இரவு ஜெகதளா பகுதியில் கரடி ஒன்று குடியிருப்பு வீட்டின் கதவை தட்டும் வீடியோ அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள வீடியோவை கண்ட குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே கரடி ஒன்று வீட்டின் கதவை தட்டும் சமூக வலைதளங்கள் மூலம் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆங்கிலத்தில் பேசியதால் பல்கலை., மாணவன் மீது நாயை ஏவிய கடைக்காரர்… டெல்லியில் நடந்த கொடூரம்!