Viral

“கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளின் பிரம்மிப்பூட்டும் ஒளி நடனம்” - ஆனைமலையில் நடந்த அபூர்வ நிகழ்வு!

உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட, தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இந்த காப்பகத்தில் இரவில் மின்மினி பூச்சிகள் நடத்திய ஒளி நடனம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோடிக்கணக்கான மின்மினி பூச்சிகள் மரங்களில் ஒன்றிணைந்து, ஒளியை உமிழ, ஆனைமலை காடுகள் மொத்தமும் மென் பச்சை நிற கம்பளமாக, “அவதார்” படத்தில் வரும் காடுகளைப் போல காட்சியளித்தது. இதுதொடர்பாக வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர்களாக இருக்க கூடிய ராமசுப்ரமணியன், துணை இயக்குநர் எம்.ஜி.கணேசன், ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சிகள் ஆரய்ச்சி நிபுணர் ஸ்ரீராம் முரளி ஆகியோர் கடந்த மாதம் உலாந்து வனச்சரகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட போது, பெரிய மின்மினிப்பூச்சிக் கூட்டத்தின் ஒளிர்வைக் கண்டுள்ளனர்.

இது குறித்து ஒளி மாசுபாடு மற்றும் மின்மினிப் பூச்சி ஆராய்ச்சி நிபுணர் ஸ்ரீராம் முரளி கூறும்போது, “ ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மரங்களில் இருக்க கூடிய ஆண் மின்மினிப் பூச்சிகள் தங்கள் ஒளிக்காட்சிகளை வைத்து, தங்களுக்கு ஏற்ற துணையை கண்டறியும். அதேபோல் காட்டில் சம எண்ணிகையில் பெண் மின்மினிப் பூச்சுகளும் இருப்பதாகவும், ஆனால் அவை அனைத்தும் ஒளிரும் மற்றும் பறக்கும் திறன் அற்றதாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

தன் வாழ்நாளின் பெரும் பகுதியை லார்வாக்களாக கழிக்கும் அவை, நன்கு வளர்ந்த பிறகு மண்புழு, நத்தை உள்ளிட்டவற்றை உண்கின்றன. அதுமட்டுமின்றி வளர்ந்த மின்மினிப் பூச்சிகள் சில வாரங்கள் மட்டுமே வழ்கின்றன. மின்மினிப் பூச்சிகளின் வயிற்றின் கீழ் பிரத்யேக ஒளி உறுப்புகளைக் கொண்டுள்ளன. அவை அதிக அளவில் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. பின்பு அதிலுள்ள சிறப்பு செல்களுக்குள், லூசிஃபரின் என்ற பொருளுடன் இணைந்து ஒளியை உருவாக்குகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காணப்படும் மின்மினிப் பூச்சிகள் அப்ஸ்கோண்டிடா (Abscondita) இனத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்றும், அதன் இனத்தை சரியாக அடையாளம் காண விரிவான ஆராய்ச்சி முறை மற்றும், DNA வரிசைமுறை தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். சிக்கலன வடிவம், கருப்பு நிறக் கோடுகளுடன் பழுப்பு நிறத்தோடு, ஒரு செண்டி மீட்டருக்கு குறைவான நீளம் கொண்டவையாக அவை காணப்படுகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்மினிப் பூச்சிகளின் இந்த ஒளி உமிழ்வு நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது என்றும், இதற்கு முன்பு கடந்த 1999-ஆம் ஆண்டு மற்றும் 2012-ஆம் ஆண்டு இந்த நிகழ்வை பார்த்துள்ளதாகவும் கூறுகின்றனர். கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகளின் இந்தக் கூட்டம், சுற்றுச் சூழல் எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

உலகம் முழுவதும் மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை என்பது குறைந்து வரும் சூழலில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நிகழ்ந்த இந்த அபூர்வ நிகழ்வு நமது வருங்கால சந்ததியினருக்காக அதிகமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் நீண்டகாலமாக ஆனைமலை புலிகள் காப்பத்தில் நடைபெற்ற வனப்பாதுகாப்பு நடவடிக்கைதான் இந்த நிகழ்விற்க்கான முக்கியக் காரணமாகவும் உள்ளதாக இயற்கை நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: வெளிநாட்டு பறவைகளின் தாய்மடி.. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் நிகழும் அதிசயம் : சிறப்புத் தொகுப்பு!